பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 4 ரவுடிகள் கைது
சென்னை பெரும்பாக்கத்தில் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பெரும்பாக்கத்தில் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். பெரும்பாக்கம் அருகே அரசன்கழனியில் கடந்த 19ஆம் தேதி பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடிய படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி உட்பட பலரைத் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் அதேபாணியில் பெரும்பாக்கம் எழில் நகரில் கடந்த 5 ஆம் தேதி 20க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி ஒருவருடைய பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்கள் கோட்டூர்புரம், அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு பகுதிகளை சேர்ந்த ரவுடிகள் என்பதை கண்டறிந்தனர். இவர்கள் மீது பள்ளிகரணை, சேலையூர், செம்மஞ்சேரி, நீலாங்கரை, ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய, பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த சிவனாந்தம், தினேஷ்குமார் , திவகர், சல்மான் ஆகியோரை கைது செய்தனர். மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story