மீண்டும் தலைதூக்கும் கந்துவட்டி கொடுமை : குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் காந்திநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் அண்ணாமலை, புதுப்பேட்டை சாலை ஓரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியில் கூட்டாக கந்துவட்டி நடத்திவரும் கோவிந்தராஜ், ரமேஷ், சாந்தி ஆகியோரிடம், ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக அண்ணாமலையின் மளிகை கடை மூடப்பட்டதால், வருமானம் இன்றி தவித்துக் கொண்டிருந்தார். இதனிடையே கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பிதர வேண்டும் என்று, ரமேஷ் மற்றும் கோவிந்தராஜ் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அண்ணாமலையை தகாத வார்த்தைகளுடன் ஆபாசமாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த அண்ணாமலை, அவரது மனைவி புஷ்பா, மூன்று பிள்ளைகள் 9 வயதான மோகன ஸ்ரீ, 7 வயதான லோகப்பிரியா, 6 வயதான அட்சயா ஆகியோருக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். குடும்பத்துடன் அவர்கள் மயக்க நிலையில் உள்ளதை கண்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், 5 பேரையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அண்ணாமலையின் மகள் ஒருவர் உயிரிழந்தார்.
Next Story