கொரோனாவிற்கு அக்குபஞ்சர் முறை மூலமாக சிகிச்சை அளிக்கலாமா? - மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அக்குபஞ்சர் முறையில், சிகிச்சை அளிப்பது குறித்து, 4 வாரத்தில் முடிவு செய்ய வேண்டும் என, மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அக்குபஞ்சர் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி, சென்னையை சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில்,கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆங்கில மருத்துவ முறையில் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அக்குபஞ்சர் முறை மூலமாக சீனாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார். இதை உலக சுகாதார நிறுவனமும் ஏற்றுக்கொண்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வு, மனுதாரர் 3 வாரங்களில் மத்திய அரசுக்கு மருத்துவ ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்றும், அதை மத்திய ஆயுஷ் அமைச்சகம் 4 வாரங்களில் பரிசீலித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Next Story