பிறந்து 2 நாள் ஆன பெண் குழந்தை மர்ம மரணம் - குழந்தையின் பெற்றோர் மீது மருத்துவர் புகார்

ஆரணி அருகே பிறந்து 2 நாளே ஆன குழந்தை பெண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் மீது மருத்துவர்கள் புகார் அளித்தனர்.
பிறந்து 2 நாள் ஆன பெண் குழந்தை மர்ம மரணம் - குழந்தையின் பெற்றோர் மீது மருத்துவர் புகார்
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் தவமூர்த்தி. இவரின் மனைவி பிரியா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். 

இந்த சூழலில் 3 வதாக கருவுற்ற பிரியாவுக்கு கடந்த 20ஆம் தேதி காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. 
ஆனால் அந்த அடுத்த நாளே அந்த குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என கூறி பிரியா வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

ஆனால் மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையின் சடலத்தை பெற்றோர் இருவரும் இரும்புலி இடுகாட்டில் அடக்கம் செய்தனர். 

ஆனால் குழந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அக்சிதா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். குழந்தையின் மரணத்தில் பெற்றோருக்க தொடர்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்ததை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து அந்த புகாரின்பேரில் அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. போளூர் வட்டாட்சியர் பாலாஜி தலைமையில், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவல் கமலக்கண்ணன் உள்ளிட்ட குழுவினர் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். 

தவமூர்த்தி - பிரியா தம்பதியருக்கு ஏற்கனவே பெண் குழந்தை இருக்கும் நிலையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் அது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் கிளப்பியதால் இப்போது விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆனால் குழந்தையின் மரணத்துக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பெற்றோர் தரப்பில் கருத்து முன்வைக்கப்படுகிறது. இருந்த போதிலும் ஒரு வாரத்திற்குள் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே உண்மை என்ன என்பது வெளிச்சத்துக்கு வரும்...

Next Story

மேலும் செய்திகள்