மருத்துவர்கள், போலீசாரின் ஊதியம் - நீதிபதிகள் கருத்து
அரசு மருத்துவர்களும், தூய்மைப் பணியாளர்களும், காவல் துறையினரும் மேற்கொள்ளும் பணிகளுக்கு,அவர்கள் பெறும் ஊதியம் ஈடானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதித்தவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடர்ந்திருந்தார்.
* இந்த வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
* அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தமிழக அரசிடம், 37 ஆயிரத்து 648 முழு உடல் கவசங்களும், ஒரு லட்சத்து 17 ஆயிரம் என் -95 முக கவசங்களும்,7 லட்சத்து 75 ஆயிரத்து 106 மூன்று மடிப்பு முக கவசங்களும் உள்ளதாக தெரிவித்தார்.
* 14 ஆயிரம் பரிசோதனை கருவிகள் தற்போது இருப்பில் இருப்பதாகவும்உணவின்றி எவரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும், ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் கூறினார்.
* இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அடிக்கடி பரிசோதனை நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
*மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனாவுக்கு எதிராக நாள் முழுவதும் போராடும் அரசு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு வழங்கப்படும் ஊதியம், அவர்களின் சேவைக்கு ஈடாக இல்லை எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
* அவர்களின் சேவையை பாராட்டி, மத்திய - மாநில அரசுகள் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் என நம்பிக்கை தெரிவித்து, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
Next Story