கணவன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் கர்ப்பிணி மனைவி தூக்கு போட்டு தற்கொ​லை - திருமணமான 9 மாதத்தில் நடந்த சோகம்

கடலூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட கணவன், மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் கர்ப்பிணி மனைவி தூக்கு போட்டு தற்கொ​லை - திருமணமான 9 மாதத்தில் நடந்த சோகம்
x
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையை  சேர்ந்தவர் மணிகண்டன். பெயிண்டரான இவர் மகேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து கடந்த 9 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். 

திருமணமான நாளில் இருந்த வேலைக்கு போகாமல் இருந்து வந்த மணிகண்டன், குடிபோதைக்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. கணவருக்கு பலமுறை அறிவுரை கூறியும் அவர் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. 3 மாதம் கர்ப்பமாக இருந்த மகேஸ்வரின் கணவரின் செயலால் விரக்தியில் இருந்துள்ளார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டுக்கு குடிபோதையில் வந்த மணிகண்டன், மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மகேஸ்வரி, தன் கணவனை திருத்த முடியவில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

கர்ப்பிணியாக இருந்த போதிலும் மனைவி தற்கொலை செய்வதை அறியாத அளவுக்கு போதையில் மூழ்கி கிடந்தார் மணிகண்டன். காலையில் போதை தெளிந்ததும் எழுந்த அவர், மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மனைவியின் இந்த முடிவுக்கு தானே காரணம் என விரக்தியடைந்த அவர், தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

வீடு நீண்ட நேரம் திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கணவன், மனைவி இறந்து கிடப்பது தெரியவந்தது. சடலத்தை மீட்ட போலீசார் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்