பெண்களுடன் பேசி பழகுவதில் ஏற்பட்ட மோதல் : நண்பனை கொன்று புதைத்த கொடூரம்
கடலூரில் டிக் டாக் வலையில் சிக்கிய இளைஞர் ஒருவரை அவரது நண்பனே கொன்று புதைத்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் டிக் டாக் வலையில் சிக்கிய இளைஞர் ஒருவரை அவரது நண்பனே கொன்று புதைத்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் முதுநகர் அருகே உள்ள சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் ஜெயிவின் ஜோசப். 18 வயதான இவர், டிப்ளமோ படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தன் நண்பர்களோடு சுற்றி வந்துள்ளார்.
கடந்த 4ஆம் தேதி வீட்டை விட்டு சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது தாய் பிரதீபா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவரது நண்பர்கள் மீது சந்தேகம் வலுத்தது. ஜெயிவின் ஜோசப்பின் செல்போனை ஆய்வு செய்ததில் அவரது நண்பர்கள் 2 பேரிடம் கடைசியாக பேசியது தெரியவந்தது.
இதையடுத்து முதுநகரை சேர்ந்த விஜய் மற்றும் காரைக்காடை சேர்ந்த பிரபாகரன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தான் மாயமானதாக கூறப்படும் ஜெயிவின் ஜோசப், கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பேசி பழகுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை எழுந்துள்ளது. இதில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட சம்பவமும் நடந்துள்ளது. இதனை தனது செல்போனில் பதிவு செய்த ஜெயிவின் ஜோசப், அதை டிக் டாக்கில் பதிவு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், ஜெயிவின் ஜோசப்பை கடந்த 4ஆம் தேதி உப்பணாறு அருகே வரவழைத்துள்ளது. பின்னர் மது அருந்திவிட்டு அவரின் கழுத்தை அறுத்து கொன்றதோடு ஆற்றிலேயே புதைத்துவிட்டு சென்றுள்ளனர். கொலையாளிகள் 2 பேரும் இதனை போலீசாரிடம் தெரிவித்ததை தொடர்ந்து 13 நாட்களுக்கு பிறகு கொலையான ஜெயிவின் ஜோசப்பின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
உடலை எடுத்த பின் அதனை சம்பவ இடத்திலேயே ஆய்வு செய்த போது கழுத்து அறுக்கப்பட்டு கொலையானது உறுதியானது. இந்த கொலையில் தொடர்புடைய மற்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பெண் விவகாரம், டிக் டாக் விபரீதத்தால் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது...
Next Story