"நீட் தேர்வு கட்டாயம்" - உச்ச நீதிமன்றம் உறுதி
மருத்துவ படிப்புக்கு நீட் கட்டாயம் என்ற முடிவில் இருந்து பின் வாங்கப்போவதில்லை என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2017, 2018ம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது.
இந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக வேலூர் கிறித்தவ மருத்துவ கல்லூரி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு, ஏற்கனவே சிஎம்.சி விவகாரம் தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டதே என கேள்வி எழுப்பியுள்ளது.
இதனை தொடர்ந்து, இந்த வழக்கு முற்றிலும் புதியது, நீட் சட்டத்திருத்தத்தை எதிர்த்தது என சி.எம்.சி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து, நீட் தேர்வு என்பது நாட்டில் இனிமேல் இருக்கப்போவது தானே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் மருத்துவ படிப்புக்கு நீட் என்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் தெரிவித்தனர். இதையடுத்து மனுவை கிறிஸ்தவ கல்லூரி தரப்பு திரும்பப் பெற்றதை தொடர்ந்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Next Story