தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, நீலகிரி மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளான நன்னிலம், குடவாசல், மாங்குடி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஓரு மணிநேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இது ஒருபுறம் இருக்க ஒரு சில இடங்களில் மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து ஓடியதால் மக்கள் அவதியடைந்தனர்.
சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் வைத்தீஸ்வரன் கோயில், உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. மாலையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில், சாரல் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கன மழையாக உருவெடுக்க, சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஒசூர் சுற்றுப்புறப்பகுதிகளில் கனமழை
ஒசூர் சுற்றுப்புறப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. ஒசூரில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்த நிலையில், இந்த திடீர் கன மழையால், தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். ஆனால், ஏரி, குளங்கள் நிரம்பியதால் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Next Story