ஈரோடு : கருணாநிதி, ஜெயலலிதா சிலை வைக்கும் விவகாரம் - அதிமுக, திமுக வினர் திரண்டதால் பதற்றம்
ஈரோட்டில் கருணாநிதி, ஜெயலலிதா சிலை வைப்பது தொடர்பாக அதிமுக, திமுக கட்சியினர் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஈரோட்டில் பராமரிப்பு இன்றி காணப்பட்ட பன்னீர் செல்வம் பூங்கா மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் ஈரோடு தெற்கு மாவட்ட சார்பில் புணரமைக்கப்பட்டது. மேலும் இந்த பூங்காவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் திமுக சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா சிலை வைக்க திடீரென அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து இரவோடு இரவாக ஜெயலலிதா சிலையுடன் அதிமுகவினர் பூங்கா நோக்கி சென்றனர். இதனை அறிந்த திமுகவினரும் கருணாநிதி சிலையுடன் பூங்கா நோக்கி ஊர்வலமாக சென்றனர். இதனால் பதற்றம் நிலவியது. இதனையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். திமுகவினர் தடுத்து நிறுத்தப்பட்டதால், இதனை கண்டித்து கோஷமிட்டனர். இதனிடையே ஜெயலலிதாவின் சிலையை அமைப்பதற்காக புதிதாக பீடம் அமைக்கப்பட்டு, பெங்களுருவிலிருந்து உருவாக்கப்பட்ட வெண்கல சிலையை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Next Story