அமளி இல்லை....ஆர்ப்பாட்டம் இல்லை.... ஆக்கப்பூர்வமாக நடந்த சட்டப்பேரவை தொடர்....

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளும் அதிமுகவுடன், பிரதான கட்சியான திமுக கைகோர்த்து செயல்பட்டதன் காரணமாக, பல முக்கிய விஷயங்களில் இரு கட்சிகளும் சாதித்துள்ளன.
அமளி இல்லை....ஆர்ப்பாட்டம் இல்லை.... ஆக்கப்பூர்வமாக நடந்த சட்டப்பேரவை தொடர்....
x
ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்றாலே, பொதுவாக, எலியும், பூனை மாதிரி, எப்போது பார்த்தாலும் முட்டலும், மோதலுமாகவே இருப்பார்கள். தமிழக சட்டப்பேரவையில், பல பிரச்னைகளுக்காக, பேரவை, அமளி, துமளியான சம்பவங்கள் எல்லாம் கடந்த காலங்களில் நடந்திருக்கின்றன. ஜெயலலிதா மறைவிற்குப் பின், மூன்று மாதங்கள் பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். அதன்பின், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றதில் இருந்து, தற்போது வரை பார்த்தால், ஒரு சில சம்பவங்கள் தான் மிகப்பெரிய அளவில் நடந்திருக்கின்றன.

அதாவது, பழனிசாமி முதல்வராக பதவியேற்ற பின், 2017, பி்ப்ரவரி 18 ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த அமளி தான் அது. ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்தியது. இதை சபாநாயகர் தனபால் ஏற்காததால், மிகப்பெரும் அமளி ஏற்பட்டதில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சட்டை கிழிந்த நிலையில், குண்டுகட்டாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதேபோல் மற்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதன்பின், துாத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக, கடந்த 2018 ம் ஆண்டு மே மாதத்தில்  போட்டி சட்டசபை கூட்டம், பேரவை கூட்டத்தொடர் புறக்கணிப்பு என, திமுக ஆவேசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டது.  அதேபோல், குட்கா விவகாரம் தொடர்பாகவும், திமுக ஆக்ரோஷமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியது. இந்த சம்பவங்களுக்குப்பின், தற்போது வரை, முக்கிய பிரச்னைகளில் கடுமையான வாக்குவாதங்கள் மற்றும் சில வெளிநடப்புகளில் திமுக ஈடுபட்டிருந்தாலும்,  ஆளுங்கட்சியுடன், திமுக கைகோர்த்து செயல்பட்டதால், முக்கிய பிரச்னைகளில், மாநிலத்தின் உரிமைகள் காக்கப்பட்டிருப்பதை, அவையில் நடந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.

நீட் தேர்வு குறித்து காரசாரமாக இரு முறை விவாதம் நடந்தது. இது தொடர்பான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், நீட் தேர்வு விவகாரத்தில், மீண்டும் இரு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் எனவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனவும் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளி்தத துணை முதல்வர், மீண்டும் ஒரு முறை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்; பதில் அளிக்காத பட்சத்தில், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, ஒரு முடிவை எடுப்போம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுப்போம்'' என்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போதும், ‛‛நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் அனைவருடைய கருத்தாக இருக்கிறது. எனவே, மத்திய அரசின் முடிவை தெரிந்துகொண்டு, அதன்பின் ஒரு முடிவை எடுப்போம்'' என்றார்.

இதேபோல், முன்னேறிய வகுப்பினரில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில், அவையில் காரசார விவாதம் நடந்தது. இதில் பேசிய ஸ்டாலின், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்'' என வலியுறுத்தினார். அதை அப்படியே ஏற்றுக்கொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி கடந்த 8 ம் தேதி மாலை, துணை முதல்வர் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் உட்பட பலரும் கலந்து  கொண்டனர். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனில், 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மாட்டோம்' என துணை முதலமைச்சர் உறுதியளித்தார்.

அடுத்தது தபால்துறை தேர்வு ரத்து விவகாரத்தை குறிப்பிட்டுச் சொல்லாம். கடந்த 15ம் தேதி, தபால்துறை தேர்வை தமிழில் நடத்தாதற்கு எதிர்ப்பு  தெரிவித்து, ஸ்டாலின் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார். மத்திய அரசை கண்டித்து, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்த, ‛‛அதிமுக-திமுக இரு கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து பாராளுமன்றத்தில் நாளை குரல் கொடுப்போம்; அதற்கு மத்திய அரசின் பதில் என்ன வருகிறது என பார்ப்போம்; அதன்பின் முடிவெடுப்போம்' என்றார். அவர் சொன்னபடி, மறுநாள் 16 ம்தேதி, பாராளுமன்றத்தில் அதிமுக-திமுக எம்.பி.,க்கள், தமிழிலும் அஞ்சல் துறை தேர்வை நடத்த வேண்டும் என வலியுறு்த்தி வாக்குவாதத்தில் ஈடுப்டடனர். இதன் காரணமாக, தபால்துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக, மத்திய அமைச்சர் அறிவித்தார். இரு கட்சிகளும் சேர்ந்து குரல் கொடுத்ததில், இது சாத்தியமானது!

இந்த தொடரில், சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் பிரச்னையையும், திமுக எழுப்பியது. இதில் பேசிய முதல்வர், இரு கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து, பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்; எந்த வகையிலும், சேலம் உருக்காலையை நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம்'' என உறுதியாக தெரிவித்தார். இப்படி நீட் தேர்வு, தபால்துறை தேர்வு, சேலம் உருக்காலை விவகாரம், இட ஒதுக்கீடு விவகாரம், உச்சநீதிமன்றத்தில் தமிழ்  என, முககிய பிரச்னைகளில், மாநிலத்தின் உரிமையை காப்பதற்காக, ஆளும் அதிமுக வுடன், பிரதான எதிர்க்கட்சியான திமுக கைகோர்த்து செயல்பட்டதால்,  தமிழகத்திற்கு பல  நன்மைகள் கிடைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்களும்,  மூத்த பத்திரிகையாளர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதிமுகவுடன், திமுக இணக்கமான போக்கை கடைபிடிப்பதற்கு மறொரு சம்பவமும் பார்க்கப்படுகிறது. வழக்கமாக,  காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தபின், முதல்வர் பதிலளிக்கும்போது ஸ்டாலின் எழுந்து சென்றுவிடுவார். ஆனால், இம்முறை, விவாதம் மற்றும் முதல்வரின் பதிலுரை நிறைவுபெறும் வரை அவையில் ஸ்டாலின் இருந்து கேட்டதும், ஆக்கப்பூர்வமான விஷயமாக பார்க்கப்படுகிறது. 

மேலும். 19 ம் தேதி அவையில் பேசிய ஸ்டாலின், அரசு விழாக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அனைத்து திமுக உறுப்பினர்களும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என தான் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி சேலத்தில் முதல்வர் பங்கேற்ற விழாவில் கூட திமுக உறுப்பினர்கள் பங்கேற்றதாகவும் தெரிவித்தார். இதன்மூலம், இனி அனைத்து அரசு விழாக்களிலும் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் திமுக எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்பார்கள் என்பது உறுதியாகி உளளது. இப்படி, ஆளும் அதிமுகவும், திமுகவும்  கைகோர்த்து செயல்படுவது வரும் ஆண்டுகளிலும் தொடரும்பட்சத்தில், தமிழகத்தின் நலன் பாதுகாக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை!

Next Story

மேலும் செய்திகள்