தீயில் காட்டினால் அழியும் எழுத்துக்கள் : வெளிச்சத்துக்கு வந்த "மேஜிக் பர்மிட்" மோசடி

வெப்பத்தினால் அழியும் எழுத்துக்களை பயன்படுத்தி பெறப்படும் பர்மிட் மூலம் கல்குவாரிகளில் தினமும் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தீயில் காட்டினால் அழியும் எழுத்துக்கள் : வெளிச்சத்துக்கு வந்த மேஜிக் பர்மிட் மோசடி
x
ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட குவாரிகள், அரசு அனுமதியுடன் செயல்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் ஜல்லி, ரஃப் கல், மேடை மண், சரளை மண், ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு செல்ல, குவாரிகளில் இருந்து தரும், ஒப்புகை சீட்டு அவசியம். இதை அவர்கள், கனிம வளத்துறை அதிகாரிகளிடம், உரிய வரி செலுத்தி, பெற வேண்டும் என்பது கட்டாய நடைமுறை...

ஒப்புகை சீட்டில், குவாரியில் இருந்து கனிமங்கள் கொண்டு செல்லும் நாள், நேரம், ஓட்டுனர் பெயர், உத்தேச தூரம், குவாரி உரிமையாளர் கையொப்பம் ஆகியவை இருக்கும். மேலும், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளின் முத்திரை, கையொப்பம், அரசின் ஹோலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.  அவ்வாறு பெறப்படும் ஒரு ஒப்புகை சீட்டு ஒரு லோடுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

சம்பந்தபட்ட துறை அதிகாரிகள், சோதனை செய்யும்போது, ஒப்புகை சீட்டை காட்ட வேண்டும். இல்லையேல் லாரியை பறிமுதல் செய்யவும், ஓட்டுனரை கைது செய்யவும், சட்டத்தில் வழிமுறை உள்ளது. இந்த நிலையில், இந்த அனுமதி சீட்டு  பெருவதில் பெரிய அளவில் மோசடி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

வெப்பத்தில் காட்டினால், மறையும் தன்மையுள்ள மையை கொண்டு லாரி எண், தேதி, நேரம் ஆகியவை எழுதப்படுவதாகவும், பின்னர் அவற்றை தீயில் காட்டி அழித்த பிறகு அதில் வேறொரு லாரி எண் உள்ளிட்ட தகவல்களை எழுதி முறைகேடு நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.  இந்த வகை "மேஜிக் பர்மிட்டை" பயன்படுத்தி சென்னிமலை மற்றும் பெருந்துறை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர்கள் ஒரு அனுமதி சீட்டை வைத்துக் கொண்டு தினந்தோறும் நூற்றுக்கணக்கான லோடு கனிமங்களை சட்டத்திற்குப் புறம்பாக லாரிகளில் கடத்தி விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே ஈங்கூர் அருகே நான்கு  லாரிகளை மடக்கி பிடித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது  ஓட்டுனர் கொடுத்த அனுமதி சீட்டை சூடாக உள்ள புகைபோக்கியில் காண்பித்த போது, அதில் உள்ள எழுத்துக்கள் மாயமானது.  உடனடியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு லாரிகளை கொண்டு வந்த அதிகாரிகள் மேஜிக் பர்மிட் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்