உலக அளவில் 220 கோடி பேருக்கு குடிக்க சுகாதாரமான நீர் இல்லை : ஐக்கிய நாடுகள் சபை பகீர் தகவல்
உலக அளவில் 220 கோடி பேருக்கு குடிப்பதற்கு சுகாதாரமான தண்ணீர் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மக்கள் தொகை பெருக்கம், நாம் பயன்படுத்தும் ஏ.சி., இயந்திரங்கள், குப்பைகள் எரிப்பது, வாகனங்களால் இருந்து வெளியேறும் புகை போன்ற காரணங்களால் உலகம் வெப்பமயமாகி வருகிறது. இதனால் சீதோஷ்ண நிலையில் கடும் மாற்றம் ஏற்பட்டு மனித குலத்திற்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்த சூழலில், உலகில் 220 கோடி பேருக்கு குடிக்க சுகாதாரமான தண்ணீர் வசதி இல்லை என்று ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.உலக சுகாதார நிறுவனம் மற்றும் குழந்தைகளுக்கான ஐ. நா. நிறுவனமான யூனிசெப் ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. அதில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில் குடிநீர், சுகாதாரம் தொடர்பான கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது.இதன்படி உலகில் 220 கோடி பேர் சுகாதாரமான குடிநீர் வசதியின்றி தவிப்பது தெரியவந்துள்ளது. அதேபோல், 4.2 பில்லியன் பேர், கை கழுவதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதாரத்தை பேண முடியாமல் தவிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று, திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் 21 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 67.3 கோடி பேர் திறந்த வெளியில் கழிவுகளை கழித்து வருவதாகவும், இது பல நாடுகளுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாகவும் ஐ.நா. ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
Next Story