ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தல் : போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தல் : போலீசார் விசாரணை
x
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மும்முடியை சேர்ந்தவர் கொம்பாட்டி மணி. பிரபல பைனான்ஸ் அதிபரும், ரியல் எஸ்டேட் அதிபருமான இவர், கடந்த 16 ஆம் தேதி காலை 9 மணியளவில், சாம்பேரி பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டார்.இதை கண்ட அக்கம்பக்கத்தினர் தலைவாசல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.பைனான்ஸ் அதிபர் கொம்பாட்டி மணியின் தம்பி துரைராஜ் அளித்த புகாரின் பேரிலும், தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். கடத்தப்பட்ட கொம்பாட்டி மணி, பைனான்ஸ் தொழிலுடன் சேர்த்து,ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். எனவே தொழில் போட்டி அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் காலை வேளையில் நடந்த இந்த துணிகர கடத்தல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், சேலம் ஆத்தூர் அருகே மற்றொரு இளம் தொழிலதிபர் கடத்தப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஹவுசிங் போர்டு பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். பள்ளி ஒன்றின் பங்கு தார‌ர், மல்லியக்கரை பகுதியில் பெட்ரோல் பங்க் , ரியல் எஸ்டேட் என அப்பகுதியில் இளம் தொழிலதிபராக வலம் வருகிறார், சுரேஷ். இந்த நிலையில், தனது மகனை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வர தனது காரில் சென்ற சுரேஷை, மேட்டூர் தரைப்பாலம் பகுதியில் ஸ்கார்பியோ கார் ஒன்று வழி மறித்துள்ளது. காரில் இருந்து திபுதிபுவென இறங்கிய 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சுரேஷை கடுமையாக தாக்க தொடங்கியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், சுரேஷின் அலறல் சத்தம் கேட்டு, அருகே இருந்த மக்கள் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து, சுரஷை தங்கள் காரில் கடத்தி கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றது அந்த மர்ம கும்பல்.சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் கண்காணிப்பாள் ராஜூ தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுரேஷை கடத்தி சென்ற ஸ்கார்பியோ கார், சேலம் அரசு மருத்துவமனை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரை பறிமுதல் செய்துள்ள தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.கடத்தப்பட்ட இருவரும், ரியல் எஸ்டேட் அதிபர்கள் என்பதால், ரியல் எஸ்டேட் அதிபர்களை குறிவைத்து கடத்தலா என்ற கோணத்திலும் போலீசார் விசரணையை தொடர்ந்துவருகின்றனர்.பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அடுத்தடுத்து அரங்கேறிவரும் துணிகர கடத்தல் சம்பவங்கள்  மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்