கோவை அருகே, சீர்திருத்த திருமணம் செய்த காதல் ஜோடி - சேர்த்து வைப்பதாக கூறி மாப்பிள்ளை அடித்து விரட்டல்
கோவை அருகே, தமது மகளை சீர்திருத்த திருமணம் செய்த இளைஞரை வீட்டுக்கு வரவழைத்து பெண்ணின் தந்தை அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை போத்தனூரை சேர்ந்த ஜீவாஜெய்சன் என்ற இளைஞர், தன்னோடு கல்லூரியில் படித்த வடவள்ளியைச் சேர்ந்த பெண்ணை சீர்திருத்த முறையில் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் செய்துள்ளார். காந்திபுரத்தில் உள்ள பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், பெற்றோர் சம்மதம் தெரிவித்தவுடன் வருவதாக கூறி தாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு, தற்போது மாப்பிள்ளை பார்த்துள்ளனர். சம்பவம் அறிந்த பெண், தன் கணவன் ஜீவாஜெய்சன் வீட்டுக்கு வந்துள்ளார். இதுகுறித்து, பெண் வீட்டாருக்கு தகவலும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இருவரையும் தாம் சேர்த்து வைப்பதாக கூறிய பெண்ணின் தந்தை ராஜகோபால், ஆசை வார்த்தை கூறி வடவள்ளிக்கு வரவழைத்துள்ளார். முதலில் நன்றாக பேசிய பெண்ணின் தந்தை, உறவினர்கள் வந்தவுடன், இளைஞர் ஜீவா ஜெய்சனை சரமாரியாக அடித்து துரத்தியுள்ளார். அவரது கார் மற்றும் செல்போனையும் அவர்கள் பறித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தப்பிவந்த ஜீவாஜெய்சன், தமது மனைவியை வீட்டில் அடைத்து வைத்துவிட்டு, தம்மை அடித்து துரத்தியதாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Next Story