"மோட்டார் வாகன சட்டத்தை திருத்தாதது ஏன்?" - உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து
25 ஆண்டுகளாகியும் மோட்டார் வாகன சட்டத்தை திருத்தி அமைக்காதது, பாதிக்கப்பட்டோருக்கான நீதியை மறுக்கும் செயல் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளாது.
சாலை விபத்தில் கர்ப்பிணி மனைவியை பறிகொடுத்த தேனி மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவர் இழப்பீடு வழங்க கோரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தேனி நீதிமன்றம், பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்சத்து 34 ஆயிரத்து 360 ரூபாய் இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், காப்பீடு நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. 1988ல் ஏற்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வராதது, பாதிக்கப்பட்டோருக்கான நீதியை மறுப்பதாகும் என நீதிபதி தெரிவித்தார். அந்த சட்டத்தில் உள்ள இழப்பீடு வழங்கும் பிரிவுகள் 3 அல்லது ஐந்தாண்டுக்கு ஒரு முறை திருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால், துரதிஷ்டவசமாக இதுவரை எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் வேதனை தெரிவித்தார். விதிகளை முறையாக பின்பற்றாதது, போதிய விழிப்புணர்வு இல்லாதது, பராமரிப்பு அற்ற சாலைகள் ஆகியவற்றால் தான் விபத்துகள் அதிகரிப்பதாகவும் நீதிபதி கூறினார். எனவே, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கான இழப்பீடு 20 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும், அதில் 12 லட்சம் ரூபாயை மகன் நவீன்ராஜ் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
Next Story