கோவில் திருவிழாவில் தகராறு - சாலை மறியல் : போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு
கரூர் அருகே கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
கரூர் மாவட்டம் நானபரப்பு மாரியம்மன் கோவில் திருவிழாவின் இறுதி நாளில், மஞ்சள் நீர் கம்பம், காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு மதத்தினர் வசிக்கும் தெரு வழியாக சென்றபோது, அங்குள்ள சிலர் மீது மஞ்சள் நீர் பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தகராறு எழுந்தபோது, ராஜிவ், சாதிக் பாட்சா ஆகிய இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கக்கன் காலனி பகுதியை சேர்ந்த சிலர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்யுமாறு மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால், போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, போலீஸார் மீது கற்கள் வீசப்பட்டது. இதையடுத்து, 6 பேரை போலீசார் கைது செய்தனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது
Next Story