பன்றி இறைச்சி கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கு : கொலையாளிகளை காட்டிக்கொடுத்த சிசிடிவி பதிவுகள்

சென்னையில், பன்றி இறைச்சி பக்கோடா கடைகாரர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
பன்றி இறைச்சி கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கு : கொலையாளிகளை காட்டிக்கொடுத்த சிசிடிவி பதிவுகள்
x
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள நாகல்கேணியை சேர்ந்த சீனிவாசன், அதே பகுதியில் பன்றி இறைச்சி பக்கோடா கடை நடத்தி வந்துள்ளார். சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல சீனிவாசன் அங்கும் இங்கு திரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சீனிவாசனை துரத்திய மர்ம கும்பல், அவரை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பிச்சென்றது. இதில் படுகாயம் அடைந்த சீனிவாசன், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பன்றி வளர்ப்பவர்களுக்கு தெரியாமல், பன்றிகளை திருடி விற்பனை செய்து வந்ததால் ஏற்பட்ட பிரச்சினையில் சீனிவாசன் அடித்து கொலை செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக நாகல்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், மர்மகும்பல் தப்பிச்சென்ற இரண்டு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு குரோம்பேட்டையை சேர்ந்த விஜய் மற்றும் பார்த்திபனை கைது செய்து விசாரணை நடத்தினர்.  அதில், மதுபோதையில் இருந்த சீனிவாசன், வாகனத்தில் சென்று கொண்டு இருந்த விஜய் மற்றும் பார்த்திபனை இரும்பு கம்பியால் தாக்கியதும், இதனையடுத்து அவர்கள் இருவரும் மொபைல் போன் மூலம் நண்பர்களை வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து சீனிவாசனை தாக்கிவிட்டு தப்பியதும் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக விஜய், பார்த்திபன், ஆனந்த்,  டில்லிபாபு, கண்ணன, சூர்யா உள்பட 7 பேரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள கரண் என்பவரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்