ஐஜி முருகன் மீதான பாலியல் புகார் : தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை
ஐஜி முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி முருகன் மீதான பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாகா குழு மற்றும் சிபிசிஐடி விசாரணையை எதிர்த்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஐஜி முருகனுக்கு எதிராக பெண் எஸ்.பி கொடுத்த புகார் தொடர்பாக 2 வாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய விசாகா குழுவுக்கு உத்தரவிட்டார். அனைத்து அரசு அலுவலகங்களிலும் உயர் அதிகாரிகளின் அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் எனவும், சிபிடிஐடி விசாரணையை தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி விசாரணை, ஒழுங்கு நடவடிக்கை, விசாகா குழு விசாரணையில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். மேலும் மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசு மற்றும் சிபிசிஐடிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
______________________________
Next Story