தமிழக கோவில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை ? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், தங்கும் விடுதிகளை பராமரிப்பது போல், தமிழகத்தில் உள்ள கோவில்களில் ஏன் பராமரிப்பதில்லை? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,பூஜை நேரம், பூஜை கட்டணம், கோவில் பணியாளர்கள் விவரம், போன்ற தகவல்களை மக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும், கோவில் விடுதி, மண்டபம் பதிவு செய்வதை ஆன் லைனில் முறைபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் N.கிருபாகரன், S.S.சுந்தர் அமர்வு, திருப்பதி கோவிலில் தங்கும் விடுதிகள் வசதியாக உள்ளது போல், இங்குள்ள பழநி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோவில்களில் ஏன் இல்லை? என கேள்வி எழுப்பினார். அவரவர் மதம் அவரவருக்கு உயர்ந்தது , என்றும், யாரும் பிற மதத்தினரை குறை கூற வேண்டாம் என கூறிய நீதிபதிகள் இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், வருவாய் துறை செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
Next Story