சந்தியாவை கொலை செய்தது எப்படி? - கணவனின் திடுக்கிடும் வாக்குமூலம்

சென்னை பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் சந்தியாவின் தலையை போலீசார் தீவிரமாக தேடிவரும் நிலையில் இந்த படுகொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மனைவியை கொலை செய்தது எப்படி என கைதான பாலகிருஷ்ணன் அளித்துள்ள வாக்குமூலம் கதிகலங்க வைக்கிறது.
x
சென்னை பள்ளிக்கரணை குப்பைமேட்டில் கடந்த 21ம் தேதி பெண்ணின் கை கால்கள் வெட்டப்பட்ட நிலையில் உடல் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உடலில் பச்சை குத்தி இருந்த ஆதாரங்களை வைத்து காணாமல்போனவர்கள் பற்றிய பட்டியலை தயார் செய்து தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் ஆய்வாளருக்கு ஒருவர் போன் செய்து படத்தில் இருக்கும் அந்த பச்சை குத்திய அடையாளங்களுடன் ஒரு பெண்ணை பார்த்து இருப்பதாகவும், அங்கு சென்று விசாரித்தால் துப்பு கிடைக்கலாம் என்று கூறியுள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் முதலில் தூத்துக்குடி சென்று பாலகிருஷ்ணனின் தாய் தந்தையிடம் விசாரணை நடத்தினர். அப்போது தன் மருமகள் சந்தியா, தன் மகனுடன் வாழ மறுத்துவிட்டு பெற்றோருடன் வசித்து வருவதாக கூறியுள்ளனர். அதன்பிறகு சந்தியாவின் வீட்டுக்கு சென்ற தனிப்படை போலீசார், அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில், கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி 75 ஆயிரம் ரூபாய் பணம்  வாங்கி கொண்டு  சென்னைக்கு செல்ல உள்ளதாக கூறி விட்டு புறப்பட்டு சென்றதாக தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சினிமாத்துறையில் உள்ள கணவர் பாலகிருஷ்ணனை பார்க்க சந்தியா சென்னை வந்திருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்திய போது தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சந்தியாவின் நடத்தை பிடிக்காமல் இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் தான் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருந்த சந்தியாவை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலகிருஷ்ணன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பிரச்சினை அதிகமாகவே சந்தியாவை கொலை செய்திருக்கிறார் பாலகிருஷ்ணன். மனைவி உயிரிழந்ததையடுத்து அவரது உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி பைகளில் எடுத்துச் சென்று குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார். உடல் பாகம் இருந்த பையை அடையாறு ஆற்றங்கரையில் வீசிச் சென்றுள்ளார். இதனிடையே சந்தியாவின் தாயார், பாலகிருஷ்ணனை போனில் தொடர்பு கொண்டு மகள் குறித்து கேட்டதற்கு சந்தியாவை வெளிநாடு அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக கூறியதால் அவரது பெற்றோருக்கு எந்த வித சந்தேகமும் வரவில்லை. ஆனால் தன் மகனுடன் வாழ மருமகள் விரும்பவில்லை என்றும், இருவரும் பிரிந்து வாழ்ந்ததாக கூறுகிறார் பாலகிருஷ்ணனின் தாய் சரோஜினி. மனைவியை கொடூரமாக கொலை செய்ததற்கான எந்தவித பயமும் பதட்டமும் பாலகிருஷ்ணனின் நடவடிக்கையில் தெரியவில்லை என போலீசார் நடத்திய விசாரணையின் போது தெரியவந்தது. இறந்தது சந்தியா தான் என உறுதியானதையடுத்து அடையாறு ஆற்றங்கரையில் கிடந்த உடலின் மற்றொரு பாகமும் மீட்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு வந்த சந்தியாவின் பெற்றோர் மற்றும் சகோதரி இந்த கொலையில் பாலகிருஷ்ணன் தாய் தந்தைக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் அவர்கள் சந்தியாவை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். தன் மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என கண்ணீர் விட்டு அவர்கள் கதறி அழுத காட்சி நிச்சயம் காண்போரை கண்கலங்க வைக்கும். 

சந்தியாவின் கணவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்
துண்டுதுண்டாக கொல்லப்பட்ட சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணனை, வரும் 19ஆம் தேதி வரை காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சந்தியாவின் தலை மற்றும், உடல் பாகங்கள் இன்னும் மீட்கப்படாத நிலையில் அதுகுறித்து எந்த பதிலும் அளிக்காமல் பால கிருஷ்ண‌ன் மவுனம் காத்து வருகிறார். அவர் மீது, பள்ளிக்கரணை போலீசார், கொலை, ஆதாரங்களை மறைத்தல், ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.  இந்நிலையில், இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில், நீதிபதி ஸ்டெர்லி முன் பாலகிருஷ்ண‌ன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்