ரவிச்சந்திரன் விண்ணப்பித்தால், 10 நாட்கள் பரோல் வழங்க தயார்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல்
ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் முறையான காரணங்களுடன் உரிய முறையில் விண்ணப்பித்தால், 10 நாட்கள் பரோல் வழங்க தயார் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மறைந்த பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் தாய் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யலாம் என்ற உத்தரவு வரும் வரை தனது மகனுக்கு நீண்ட கால பரோல் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 7 பேரின் விடுதலை தொடர்பான விவகாரம் ஆளுநரின் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளதாகவும், மனுதாரர் நீண்ட விடுப்பு கோரினால் முடிவெடுப்பதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் முறையான காரணங்களுடன் உரியமுறையில் விண்ணப்பித்தால் 10 நாட்கள் பரோல் வழங்க தயாராக இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Next Story