3 மாத குழந்தையை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்

பெரம்பலூர் அருகே 3 மாத குழந்தையை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...
x
பெரம்பலூர் மாவட்டம் தேவையூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை. இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களுக்கு 6 வயதில் ரஞ்சிதா என்ற மகளும் பிரனிதா என்ற 3 மாத குழந்தையும் இருந்தது. இந்த நிலையில் பிரனிதாவுக்கு கொலுசு வாங்குவதாக கூறி பெரம்பலூருக்கு சென்றுள்ளார் கோவிந்தம்மாள். ஆனால் பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் சுயநினைவில்லாதது போல் இறங்கிய கோவிந்தம்மாள், தன் 3 மாத குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அவர் அழுததை பார்த்த கிராமமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதன் பிறகு குழந்தை கடத்தப்பட்டதாக வழக்கு பதிவு செய்த போலீசார் கோவிந்தம்மாளின் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கினர். அப்போது போலீசார் கோவிந்தம்மாளிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. 
துபாயில் வேலை பார்த்து வரும் பிச்சை அங்கே உள்ள மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு கோவிந்தம்மாளையும் அவரது பிள்ளைகளையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. பலமுறை கணவரை தொடர்பு கொள்ள முயன்றும் அவர் சரியாக பேசாததால் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். பிள்ளைகளை வளர்க்க போதிய பணம் இல்லாததால் அவர்களை கொல்ல திட்டம் தீட்டிய கோவிந்தம்மாள், தன் மகள் பிரனிதாவை வாலிகண்டபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் வீசி கொன்றுள்ளார். குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததை உறுதி செய்த பிறகு மீண்டும் ஊருக்கு திரும்பிய அவர் குழந்தை கடத்தப்பட்டதாக நாடகமாடியுள்ளார். தன் மூத்த மகள் ரஞ்சிதாவையும் கொலை செய்ய திட்டம் இருந்ததாகவும், கணவரின் துரோகத்தை தாங்கிக் கொள்ள முடியாததால் இந்த முடிவை எடுத்ததாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதையடுத்து குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார் கோவிந்தம்மாளை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்