பள்ளி சிறுமியின் உயிரைப் பறித்த கஜா புயல்
பட்டுக்கோட்டை அருகே சிறுமி உயிரிழந்த சோகத்தில் இருந்து அவரது குடும்பம் மீண்டு வர முடியாமல் தவித்து வருகிறது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அணைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்... விவசாய கூலித் தொழிலாளியான இவர் தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தென்னந்தோப்பில் குடிசை போட்டு தங்கியுள்ளார்.
இவரது 14 வயது மகள் விஜயலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு பூப்படைந்த நிலையில் அவரை அவர்கள் வழக்கப்படி வீட்டுக்கு வெளியே ஒரு ஓலைக்குடிசை கொண்டு குடிசை அமைத்து தங்க வைத்துள்ளனர்.
கஜா புயலின் போது ஊரையே கொள்ளை கொண்ட சூறாவளிக் காற்று இவர்கள் வசித்த பகுதியில் தன் அசுர பலத்தை காட்டியுள்ளது. அப்போது சிறுமி இருந்த குடிசையின் அருகே இருந்த தென்னை மரம் ஒன்று அந்த குடிசையின் மீது விழுந்தது. இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார். சிறுமியை காப்பாற்ற முயன்ற அவரது தாய் பானுமதியின் கால் மீது மற்றொரு தென்னை மரம் விழுந்ததில் கை, கால் முறிந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மகளை இழந்த சோகம் ஒரு பக்கம், மருத்துவமனையில் மனைவி, பிள்ளைகள் போல வளர்த்த மரங்கள் எல்லாம் அடுத்தடுத்து சாய்ந்து கிடக்க இன்னும் சோகத்தில் வார்த்தைகள் அடைக்கிறது தந்தையான செல்வராஜூக்கு...
Next Story