சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு : ஏரிகளில் குறைவான நீர் இருப்பு..!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் 15 நாட்களுக்கு தேவையான குடிநீரே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் சில நாட்களில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தொடங்காவிட்டால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு : ஏரிகளில் குறைவான நீர் இருப்பு..!
x
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் ரெட்ஹில்ஸ் ஏரியில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு குறைவாகவே நீர் இருப்பு உள்ளது. இந்த நீர் 15 நாட்களுக்கு தான் குடிநீர் வழங்க ஏதுவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நாளொன்றுக்கு 675 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த 4 ஏரிகளில் நீர்மட்டம் பாதி அளவுக்கும் மேல் இருக்கும் நிலையில், நாளொன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

4 ஏரிகளில் அதன் முழுக் கொள்ளளவான 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடியில், தற்போது, ஆயிரத்து 758 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டு 2  ஆயிரத்து 114 மில்லியன் கனஅடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வீராணம் ஏரி, வேளாண் கிணறுகள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் குடிநீர் தேவையை அடுத்த 2 மாதங்களுக்கு சமாளிக்க முடியும் என்றும், இதே நிலை தொடர்ந்தால் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். டிசம்பர் வரை மழை இரவு நேரங்களில் மட்டும் பெய்தால் கூட இந்த ஏரிகளின் நீர்மட்டம் பாதியை தாண்டும் நிலையில், கோடை வரை குடிநீர் வழங்குவதில் சிக்கல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீராணத்தில் இருந்து நாள்தோறும் 165 மில்லியன் லிட்டரும் நெம்மேலி மற்றும் மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் தலா 100 மில்லியன் லிட்டர் நீரும் சென்னை மாநகர் குடிநீர் தேவைக்கு எடுக்கப்பட்டு வருவதாகவும், குடிநீர் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள 22 குவாரிகளில் இருந்து நாளொன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கவும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஏரி, குளங்களில் இருந்து நாள்தோறும் 80 மில்லியன் லிட்டர் நீரை கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தேவைப்பட்டால் நெய்வேலி சுரங்கத்தில் இருந்து பல நூறு மில்லியன் கனஅடி நீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெருநகர குடிநீர் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்