சமூக விரோதிகள் தப்பிக்காதபடி குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் - உயர் நீதிமன்றம் அறிவுரை
சமூக விரோதிகள் தப்பிக்காதபடி குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த செந்தில் என்ற ரமேஷ், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி பத்மாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
மனுவில், குண்டர் தடுப்புச் சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றாமலும், அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவை முறையாக பரிசீலிக்காமலும், அறிவுரை குழுமம் கால தாமதமாக குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.விமலா, ஆர்.ராமதிலகம் அடங்கிய அமர்வு, அறிவுரைக் குழுமத்திடம் விசாரணை நிலுவையில் இருந்தாலும், அரசு இயந்திரம் தன்னிடம் அளிக்கப்படும் கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியதைச் சுட்டிக் காட்டி செந்திலை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்தனர்.
மேலும், சமூக விரோதிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே குண்டர் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இனிவரும் காலங்களில் குண்டர் தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்கும்போது, சமூக விரோதிகள் எளிதில் தப்பிக்காமல் இருக்க சட்ட நடைமுறைகளை அதிகாரிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுரை வழங்கி உத்தரவிட்டனர்.
Next Story