கோகுல்ராஜ் கொலை வழக்கு : காதலி ஸ்வாதியின் முரணான வாக்குமூலம்..!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது பெண் தோழியான ஸ்வாதி மீதும் வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற பொறியியல் பட்டதாரி கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி கிழக்கு தொட்டிபாளையம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது ஸ்வாதி என்ற பெண்ணை கோகுல்ராஜ் காதலித்து வந்ததாகவும் இதன் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த சம்பவத்தில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் 110 சாட்சிகள் அரசுத் தரப்பில் சேர்க்கப்பட்டன. இதில் முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் தோழி ஸ்வாதி நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். அதில் கோகுல்ராஜை தனக்கு யார் என்றே தெரியாது என குறிப்பிட்டுள்ளார். கோகுல்ராஜின் மரணத்திற்கு முன்பாக அவரும், ஸ்வாதியும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி இருந்த நிலையில், அர்த்த நாரீஸ்வரர் கோயில் வீடியோவில் இருப்பது நான் இல்லை என ஸ்வாதி தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே கோகுல்ராஜ் மரணம் தொடர்பான வழக்கில் ஸ்வாதி மீது வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் இருப்பது ஸ்வாதி தான் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிப்போம் என சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story