சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியீடு
சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக தமிழக எல்லைக்குள் விசாரணை நடத்திட சி.பி.ஐ-க்கு அனுமதி
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த, ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்பிரிவு அமைத்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, பல்வேறு சிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்பிரிவு விசாரித்து வந்தது.
இந்தநிலையில், சிலை கடத்தல் தொடர்பாக, பொன். மாணிக்கவேல் இதுவரை ஒரு அறிக்கையை கூட சமர்ப்பிக்கவில்லை என்பதை காரணமாக கூறிய தமிழக அரசு, சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அதன்படி, சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக தற்போது தமிழக அரசு, அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அயல்நாட்டைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டுள்ள இத்தகைய வழக்குகளை அதிக அதிகாரம் பொருந்திய அமைப்பால் தான் விசாரிக்க முடியும் என்பதால், வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசின் அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story