கேரள சட்டப்பேரவை தேர்தல் - ராகுல் வியூகம் என்ன?

கேரளாவிற்கு ராகுல் காந்தி அதி முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில், அங்கு காங்கிரசின் வியூகம் மற்றும் சவால்களை என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்...
கேரள சட்டப்பேரவை தேர்தல் - ராகுல் வியூகம் என்ன?
x
140 உறுப்பினர்களை கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில், தூதரகம் மூலம் தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் மலைப்பாம்பாக, முதல்வர் பினராயி விஜயன் அரசை சுற்றியிருந்தாலும், இடதுசாரிகளின் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருக்கிறது. கேரளாவில் அதுமட்டும் நடந்தால் காங்கிரஸுக்கு மீள முடியாத பெரும் பின்னடைவு ஏற்படும் என கூறப்படுகிறது. மறுபுறம், பாஜகவும், கேரளாவில் தன்னுடைய அரசியல் தளத்தை வலுவாக்கிவிடும். இந்த தான் நிலையில்  தான், ராகுல் காந்தியே நேரடியாக கேரள தேர்தல் பிரசாரத்தில், களமிறங்கி இருக்கிறார். மற்ற சில மாநிலங்களை போல் கேரளாவிலும், காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் நிலவுகிறது. உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா மற்றும் கே.சி. வேணுகோபால் ஆதரவாளர்கள் என ஏகப்பட்ட கோஷ்டிகள் இருக்கிறது. 2019 நாடாளுமன்ற தேர்தல் வடமாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியபோதும், கேரளாவில் 20-ல் 19 இடங்களை கைப்பற்றியது. 

கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டது, அக்கட்சி தொண்டர்களை மகிழ்ச்சியடைய செய்ததுடன், அவர்களை வெகுவாக ஊக்கப்படுத்தியது. இதுபோல் தற்போதைய தேர்தலிலும் ராகுலின் வருகை பிரதிபலிக்கும் என காங்கிரஸ் உறுதியாக நம்புகிறது. வட மாநிலங்களில் தேர்தல் பிரசாரங்களில் சுணக்கம் காட்டிய ராகுல் காந்தி, தற்போது கேரளாவில் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். மக்களை நேரடியாக சந்திக்க இடையூறாக இருந்த அரசியல் மற்றும் பாதுகாப்பு மட்டத்திலான தடைகளை எல்லாம் தகர்த்து மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக அணுகும் முறையை கையில் எடுத்து உள்ளார்., ராகுல்....

கொல்லத்தில் மீனவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, கடலில் மீன்பிடிக்கச் சென்றதும், நீந்தியதும் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. ராகுல் காந்தியின் இந்த அணுகுமுறை, கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தினை கொடுத்துள்ளது. மேலும் தேசியவாதம், பப்பு என்ற பிரசாரம் பயனளிக்காத கேரளாவில், ராகுல் காந்தியும் உற்சாகமாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். தூதரகம் வாயிலாக தங்கம் கடத்தப்பட்ட விவகாரம், அமெரிக்க நிறுவனத்துடனான ஆழ்கடல் மீன்பிடி ஒப்பந்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து அவர் பிரசாரம் செய்கிறார். இது ஒருபுறம் இருக்க கூட்டணியை பொருத்தவரை,  இஸ்லாமியர்களின் வாக்குகளை கவரும் விதமாக இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரசுடன் கூட்டணியில் தொடர்கிறது. ஆனால் மத்திய கேரளாவில் கிறிஸ்தவர்களின் வாக்குகளை காங்கிரஸ் கூட்டணிக்கு பெற்றுக் கொடுத்த கேரள காங்கிரஸ் (எம்), இடதுசாரிகள் கூட்டணியில் இணைந்திருப்பது காங்கிரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் அனைத்து தரப்பு வாக்குகளையும் கவரும் விதமாக ராகுல் காந்தியின் மதவழிப்பாட்டு தல பயணங்கள் அமைந்திருக்கிறது. கேரளாவை பொறுத்தவரையில் உள்ளூர் பிரச்சினைகளை மையப்படுத்தியே காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பளிக்கிறார்கள். இருப்பினும் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும், கொரோனா தொற்று காலக்கட்டத்திலும் பினராயி விஜயன் அரசின் செயல்பாடு பாராட்டப்பட்டது. கடந்த டிசம்பர் உள்ளாட்சி தேர்தலில் செல்வாக்கு நிறைந்த பகுதியிலும், காங்கிரஸ் அதிர்ச்சிகரமான தோல்வியை தழுவியது. இதனால் இடதுசாரிகளை வெல்வது ராகுலுக்கு சவாலான ஒன்றாகவே இருக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது. இந்நிலையில் உள்கட்சி மோதல், வேட்பாளர் தேர்வு என பல நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களின் செல்வாக்கை பெற்று காங்கிரசை ராகுல் காந்தி அரியணை ஏறச் செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்...

Next Story

மேலும் செய்திகள்