வாரணாசியில் மோடி வெற்றிக்கு எதிரான வழக்கு - மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு எதிராக பி.எஸ்.எஃப். முன்னாள் வீரர் தேஜ் பகதூர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்பு படையில் இருந்து நீக்கப்பட்ட தேஜ் பகதூர், வாரணாசி தொகுதியில் பிரதமருக்கு எதிராக போட்டியிட மனுசெய்தார். அவரது மனுவில் இணைத்து தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதனால், அவரால் மோடியை எதிர்த்து போட்டியிட முடியவில்லை. இந்நிலையில், மோடியின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி, தேஜ் பகதூர் தொடர்ந்த மனுவை இன்று தள்ளுபடி செய்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம். ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் முன்களப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு வழங்கப்படும் தரமற்ற உணவுகள் குறித்து, வீடியோவில் காட்சிகளை பகிர்ந்ததால் தேஜ்பகதூர் 2017 ஆம் ஆண்டு எல்லைப் பாதுகாப்பு படையில் இருந்து நீக்கப்பட்டவர். இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார் தேஜ் பகதூர். பின்னர் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக போட்டியிட்ட நிலையில், அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
Next Story