"எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு" - பிரதமர் மோடி

எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
x
புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ், உயர் கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள் பற்றிய மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு கல்லூரிகள், ஐ.ஐ.டி. - ஐ.ஐ.எம். - என்.ஐ.டி மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் பேசிய பிரதமர் மோடி, நமது பழைய கல்வித் திட்டம், எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என குறிப்பிட்டார். புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கும் போது எல்லாவற்றையும் ஆலோசித்ததாக தெரிவித்த அவர், மாணவர்களை உலக தரத்திற்கு மாற்ற வேண்டும் என்றும்,
எதிர்காலத்தை மனதில் கொண்டு இந்த புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.  வீட்டில் பேசும் மொழியிலேயே, கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும், குழந்தைகளுக்கு அவர்களது தாய் மொழியிலேயே கல்வி கற்றுத் தர வேண்டும் என்பதும் இந்த கல்விக் கொள்கையில் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கல்வி கற்க, கேள்வி கேட்க ஊக்குவிப்பதாக இந்த கல்விக் கொள்கை அமையும் என்றும், மாணவர்களின் அறிவும் ஆர்வமும் இதன் மூலம் அதிகரிக்கும் எனவும் தெரிவித்த அவர், 
இடையில் கல்வியை விட்டவர்கள் மீண்டும் தொடர , இந்த புதிய கல்விக் கொள்கை வழி வகுப்பதாகவும் குறிப்பிட்டார். மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், சமுதாயத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாகுபாட்டை இந்த கல்விக் கொள்கை களையும் என்றும், பிரதமர் மோடி தெரிவித்தார். எப்படி உழைக்க வேண்டும் என்பதை புதிய கல்விக் கொள்கை கற்றுத்தரும் எனவும், சாமானியர்களுக்கு குறைந்த செலவில் உயர் தொழில்நுட்பத்தை கற்றுத் தரும் வகையில் இந்த கல்விக் கொள்கை அமையும் என தெரிவித்த மோடி,  வருங்கால சந்ததியினருக்கு இந்த கல்விக் கொள்கை உபயோகமாக இருக்கும் எனக் கூறினார்.  இறுதியில் புதிய கல்விக் கொள்கைக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்