"ரபேல்" சர்ச்சை : ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியாதான் - பிரான்ஸ் முன்னாள் அதிபர் கருத்தால் பரபரப்பு
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்யும்படி கூறியது இந்தியாதான் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டே தெரிவித்துள்ளார்
பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 36 ரபேல் போர் விமானங்களை 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வாங்க, இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களைத் தயாரிக்க, பழுதுபார்க்க, 'ரிலையன்ஸ் டிபென்ஸ்' நிறுவனத்துடன் 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது
இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், 'ரிலையன்ஸ் டிபென்ஸ்' நிறுவனம், 42 ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் அடையும் எனவும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, தவறான தகவல்களை, காங்கிரஸ் கட்சியினர் பேசுவதாக ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானியும் பா.ஜ.க. தலைவர்களும் மறுத்து வந்தனர்.
இந்நிலையில் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் கூட்டு தயாரிப்பில் ஈடுபட ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்யும்படி கூறியது இந்திய அரசுதான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே தெரிவித்துள்ளார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரம் தொடர்பாக LeMonde என்ற பிரான்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த ஹாலண்டே இந்திய அரசு கொடுத்த நிறுவனத்தை பங்குதாரராக சேர்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்தால் ரபேல் போர் விமான ஒப்பந்த சர்ச்சை மீண்டும் சூடுபிடித்துள்ளது.
"பிரதமர் மோடி நாட்டை ஏமாற்றிவிட்டார்" - ராகுல்காந்தி
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நாட்டை ஏமாற்றிவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தை நடத்தி ரபேல் ஒப்பந்தத்தை மாற்றியுள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
திவாலான அனில் அம்பானிக்கு, பல கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை தனிப்பட்ட முறையில், பிரதமர் மோடி வழங்கி, நமது வீரர்களின் ரத்தத்திற்கு அவமரியாதை செய்துள்ளார் எனவும் ராகுல்காந்தி கூறியுள்ளார். இந்த விவகாரத்தை வெளிப்படுத்திய பிரான்காயிஸ் ஹோலண்டேவுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
The PM personally negotiated & changed the #Rafale deal behind closed doors. Thanks to François Hollande, we now know he personally delivered a deal worth billions of dollars to a bankrupt Anil Ambani.
— Rahul Gandhi (@RahulGandhi) September 21, 2018
The PM has betrayed India. He has dishonoured the blood of our soldiers.
Next Story