சீனாவின் வூஹானில் இருந்து கிளம்பிய கொரோனா, இப்போது கடன் வழங்கும் கள்ள செயலியை பயன்படுத்தி பலரின் வாழ்வை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.... சீனாவின் இந்த போலியான செயலி குறித்த செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...
கொரோனாவால் பலரும் வேலை வாய்ப்பை இழந்து நின்ற நேரத்தில் கடன் தருவதாக ஆசை காட்டி கவர்ச்சிகரமான விளம்பரங்கள் இணையத்தில் வெளியானது.அதுவும் செல்போனில் M Rupee என்ற செயலியை டவுன்லோடு செய்து தங்களை பற்றிய தரவுகளை கொடுத்தால் போதும், உடனே கடன் கிடைக்கும் என ஆசை வார்த்தை காட்டியதை நம்பி இந்தியாவின் பல்வேறு பகுதியினரும் அந்த வலையில் விழுந்தனர். குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி வாடிக்கையாளர்களை இழுக்கும் அந்த கும்பல், பணம் பெற்ற பிறகு அதிக வட்டி வசூலிக்க தொடங்கியது. ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விவேக் என்ற இளைஞர் ஆன்லைன் செயலியில் 4 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய நிலையில் அதனால் ஏற்பட்ட தொடர் மிரட்டல்களால் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து இந்த ஆன்லைன் செயலி விவகாரம் பூதாகரமாக உருவெடுத்தது. ஆந்திராவிலும் இந்த செயலியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இந்தநிலையில் சென்னை வேங்கை வாசலை சேர்ந்த கணேசன் என்பவர் M Rupee செயலியால் தான் பாதிக்கப்பட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலிடம் மனு ஒன்றை அளித்தார். இதன் பிறகு தான் இந்த செயலின் விபரீதம் புரிந்து விசாரணையை துரிதப்படுத்தியது காவல்துறை. இந்த M Rupee செயலியானது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருவதை அறிந்த சென்னை போலீசார் பெங்களூரு விரைந்தனர். பெங்களூருவில் கிண்டில் டெக்னாலஜி என்ற பெயரில் ஒரு அலுவலகம் அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை வைத்து அந்த நிறுவனம் இயங்கி வந்ததும் தெரியவந்தது.அங்கு அதிரடியாக சோதனை நடத்தி அந்த நிறுவனத்தின் இயக்குனர்களான பெங்களூருவைச் சேர்ந்த பிரமோதா மற்றும் பவான் ஆகிய 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த சீன நாட்டை சேர்ந்த Xioa Yamao மற்றும் Wu Yuanlum ஆகிய 2 பேர் என மொத்தம் 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். செயலி மூலம், 3 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை சுமார் 25 ஆயிரம் பேருக்கு கடன் வழங்கிவிட்டு அதிக வட்டி வசூலித்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே கடன் வாங்கியவர்கள் கடனுக்கான தவணைகளை கட்ட தவறும் போது அவர்களை போனில் மிரட்டுவதற்காக கிட்டத்தட்ட 1600 சிம் கார்டுகளை பிரபல தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களிடம் இருந்து பெற்று இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. கடன் வாங்குபவருக்கு மிரட்டல் விடுக்கும் இந்த கும்பல், அவர் தொடர்புடைய உறவினர்கள், நண்பர்களுடைய செல்போன் எண்களையும் திருடி அதை வைத்து அவர்களுக்கு அவதூறான செய்திகளை பரப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. அடுத்ததாக கடன் பெற்றவர்களின் போட்டோக்களை மோசடிக்காரர் இவர் என சித்தரித்து அதை அவர்களின் நண்பர்களுக்கும் அனுப்பியிருக்கிறது இந்த கும்பல்.
இதனால் அவமானத்தை சந்திக்கும் பலரும் கூடுதல் வட்டி என்பதை பொறுத்துக் கொண்டு பணத்தை செலுத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தங்களை ஒரு கார்ப்பரேட் கம்பெனி என கூறி சென்னையில் உள்ள பிரபல சிம்கார்டு நிறுவனத்தில் இருந்து 500 சிம்கார்டுகளையும், பெங்களூருவில் உள்ள நிறுவனம் என மொத்தம் 1600 சிம்கார்டுகளை சட்டவிரோதமாக பெற்றதும் தெரியவந்துள்ளது. இதேபோல் கடன் பெற்றவர்களிடம் இருந்து வசூலிக்கும் பணத்தை பேமெண்ட் கேட்வே எனப்படும் பணப்பரிவர்த்தனை செய்த ரேசர்பே என்ற கம்பெனி வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதும் தெரியவந்தது. இப்படி அடுத்தடுத்த தகவல்கள் தெரியவந்ததை தொடர்ந்து பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அந்த கம்பெனியின் நிர்வாகிகளை நேரில் அழைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்இந்தியாவில் உள்ள பணம் சீன செயலிக்கு எதன் அடிப்படையில் கொடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடன் செயலிகள் அனைத்துமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வராது என்பதால் இவை அனைத்துமே நான் பேங்கிங் ஃபைனான்சியல் கம்பெனி என்ற பிரிவின் கீழ் செயல்பட்டு வருவதால் அதை இந்த சீன செயலிகள் பயன்படுத்திக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது