சென்னையை அடுத்த படப்பையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து, கணக்கில் வராத ரூபாய் 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த படப்பையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து, கணக்கில் வராத ரூபாய் 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரகசிய தகவலை தொடர்ந்து, அந்த அலுவலகத்தில், ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூபாய் 2 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கி, அதிகாரிகளுக்கு பிரித்துக்கொடுப்பதாக விசாரணையில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
சாலை அமைத்து தர கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை
ராமேஸ்வரத்தில் சாலை அமைத்து தரக் கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. தீட்சிதர் கொல்லை பகுதியில் சேதமடைந்த சாலையால் தினமும் பல விபத்துகள் ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு விபத்து நிகழ்ந்ததால், அப்பகுதிவாசிகள் திரண்டு, திடீரென ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நகராட்சி ஆணையர் ராமர், விரைவில் சாலை அமைக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
காவிரிப்படுகையில் எரிவாயு கிணறு அமைப்பதை தடுக்க கோரி மனு
தமிழக அரசின் வேளாண் மண்டலம் பாதுகாப்புச்சட்டம் 2020-க்கு விரோதமாக, காவிரிப்படுகை பகுதியில் எரிவாயுக் கிணறு அமைப்பதை தடுத்து நிறுத்த கோரி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக, மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், கொரோனா பொதுமுடக்கத்தை பயன்படுத்தி ஓ.என்.ஜி.சி., கெயில் நிறுவனங்கள், பழைய எண்ணெய் கிணறு உள்ள பகுதியில் புதிய எண்ணெய், எரிவாயுக் கிணறு அமைக்கும் பணியை செய்து வருவதாக கூறினார். ஒ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழக அரசின் சட்டத்தை மதிக்காமல் அபாயகரமான கிணற்றை அமைத்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊழியர்கள்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே நியாய விலைக் கடையை ஆய்வு செய்ய வந்த வட்ட வழங்கல் அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த, பெண் ஊழியர்கள் உள்ளிட்ட 4பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காந்திநகரில் இயங்கி வரும் மகளிர் நியாய விலைக் கடையில் முறைகேடு நடப்பதாக வந்த புகாரின் பேரில், வட்ட வழங்கல் அலுவலர் தனுஜா டயானா அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது விற்பனையாளர் கலைமதி, தமது குடும்பத்தினருடன் சேர்ந்து ஆய்வு செய்ய விடாமல்,கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரைத்தொடர்ந்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆடுகளை திருடியவர்கள் கைது
கும்பகோணம் அடுத்த கொத்தங்குடி பகுதியில், கடந்த நான்கு மாத காலமாக ஆடுகள் திருடுபோன நிலையில், கொள்ளையர்களை, கண்டுபிடிக்க போலீசார் திணறி வந்தனர். இந்நிலையில், மீண்டும் ஊருக்குள் வந்த கொள்ளையர்கள், ஏரகரம் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை திருடிய போது, கையும் களவுமாக பிடித்த கிராம மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து இருவரிடம் விசாரணை நடத்திய போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தண்ணீர் குடித்து தாகம் தணித்த காட்டுயானை
ஒசூர் அருகே உரிகம் வனப்பகுதியில் யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. வனவிலங்குகளின் தாகத்தை தணிக்கும் வகையில், வனத்துறை சார்பில், வனப்பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அங்குள்ள தண்ணீர் தொட்டிக்கு, வந்த காட்டுயானை ஒன்று, தண்ணீர் குடித்து தாகத்தை தணித்தது. இதனை, அப்பகுதிக்கு சென்றவர்கள் தங்கள் செல்போன்களில் படம்பிடித்தனர்.
கொடைக்கானலில் இடி - மின்னலுடன் கனமழை
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனிடையே, நேற்று மாலையில், சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக இடி - மின்னலுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர் சோலா அருவி போன்றவற்றில் நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. குடிநீர் ஆதாரமாக விளங்கும், நட்சத்திர ஏரிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோட்டில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை
ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. வழக்கம்போல் பகலில் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில், மாலையில் சூறைக்காற்று வீசி திடீரென மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 2 மணிநேரத்திற்கு மேலாக கொட்டிய கனமழையால், மொடக்குறிச்சி, ஆணைக்கல் பாளையம், பெருந்துறை ரோடு, கொல்லம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் ஓடியது. இதனால், வெப்பம் தணிந்து, குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி
திருப்பூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காங்கேயம், அவினாசி, பல்லடம் என மாவட்ட முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. தொடர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, பிரிட்ஜ்வே காலணி , மிலட்டரி காலணி ஆகிய பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
"தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு"
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், வட தமிழக மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'S' வடிவ அகழி போன்ற அமைப்பின் தொடர்ச்சியை கண்டறிய ஆய்வு- தொல்லியல் துறை ஆய்வு பணி தொடக்கம்
சிவகங்கை மாவட்டம் கீழடியில், 6ம் கட்ட அகழாய்வின் ஒரு பகுதியாக, எஸ் வடிவ அகழி போன்ற அமைப்பின் தொடர்ச்சியை கண்டறிய தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளை தொடங்கியுள்ளனர். கதிரேசன் என்பவரது நிலத்தின் மேற்கு பகுதியில், நான்கு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இப்பகுதியில் எஸ் வடிவ அகழி அமைப்பின் தொடர்ச்சி இருக்க 100 சதவிகித வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. எஸ் வடிவ அமைப்பின் தொடர்ச்சி கண்டறியப்பட்டால், அதன் பயன்பாடு குறித்து திட்டவட்டமாக அறிவிக்க இயலும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு என புகார் - தமிழக அரசு பதில் அளிக்க கோரி வழக்கு ஒத்திவைப்பு
தமிழகத்தில் காலியாகவுள்ள 969 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட எழுத்து தேர்வில், ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த 144 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், மேலும் ஒரே தேர்வு மையத்தில் இருந்து அதிகமானோர் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும், இந்தத் தேர்வு மையங்களில் சிசிடிவி கேமரா வைக்கப்படவில்லை என்றும் மதுரையைச் சேர்ந்த அசோக் குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சுரேஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து உள்துறை செயலர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தேர்வாணைய தலைவர் ஆகியோர் பதிலளிக்க கோரி, வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-----------------------------------------------------------------------------------