முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் - கடந்து வந்த பாதை

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பிபின் ராவத்தின் வாழ்க்கை குறிப்பை சிறு தொகுப்பாக பார்ப்போம்.
x
நீலகிரி மாவட்டம், குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பிபின் ராவத்தின் வாழ்க்கை குறிப்பை சிறு தொகுப்பாக பார்ப்போம். 


இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியான பிபின் ராவத், 1958 மார்ச் 16 ஆம் தேதி, உத்தரகாண்ட் மாநிலம் பவுரி என்னும் இடத்தில் பிறந்தார். பிபின் ராவத்தின் குடும்பம் பல தலைமுறைகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றியது ஆகும். 

சிம்லாவில் உள்ள செயின்ட் எட்வார்ட்ஸ் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்த பின், புனேயில் உள்ள தேசிய ராணுவ பயிற்சி நிறுவனத்தில் பிபின் ராவத் சேர்ந்தார். பின்னர் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று, சிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றார்.

1978 ஆம் ஆண்டு, கூர்கா ரைஃபில்ஸ் படைப்பிரிவில் துணை லெஃப்டினன்டாக நியமனம் செய்யப்பட்டார். காஷ்மீரில் பல ஆண்டுகளாக பயங்கரவாத தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றி, விரைவாக பதவி உயர்வு பெற்றார். பிரிகேடியராக பதவி உயர்வு பெற்ற பின், ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோவில் நிலை நிறுத்தப்பட்டிருந்த பன்னாட்டு அமைதிப் படையின் தலைவராக பணியாற்றினார். 
பின்னர், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிறுவனத்தின் தலைவராக பணியாற்றிய பிபின் ராவத்,  2011 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டளைப் பிரிவில் மேஜர் ஜெனரலாக பணி செய்தார். 2016 ஜனவரியில் இந்திய ராணுவத்தின் தெற்கு கட்டளைப் பிரிவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய ராணுவத்தின் 26 ஆவது தளபதியாக நியமனம் செய்யப்பட்டார்.  2019 டிசம்பர் 31 - ல் முப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.  
நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான கல்லூரியில், ஜெனரல் பிபின் ராவத் எம்.பிஃல் பட்டம் பெற்றவர் ஆவார். 
அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கான கல்லூரியில், ராணுவ நிர்வாகத்தில் சிறப்பு பயிற்சி பெற்றார். 2011 - ஆம் ஆண்டு சவுத்ரி சரண் சிங் பல்கலைகழகத்தில் ராணுவம், ஊடகம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, முனைவர் பட்டம் பெற்றார். தனது நீண்ட வருட பணியில் விஷிடி சேவா பதக்கம், யுத்த சேவா பதக்கம் உள்ளிட்ட ஏராளமான பதக்கங்களை பெற்றுள்ளார். அவரின் மனைவி பெயர் மதுலிகா ராவத். அவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்