பிர்சா முண்டா பிறந்த நாள் கொண்டாட்டம் - போபாலில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கும் மோடி

பழங்குடி தலைவரான பிர்சா முண்டாவின் பிறந்த நாளான இன்று, மத்திய அரசு ஜன்ஜாதிய கவுரவ் தினமாகக் கொண்டாடுவதால் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பிர்சா முண்டா பிறந்த நாள் கொண்டாட்டம் - போபாலில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கும் மோடி
x
பழங்குடி தலைவரான பிர்சா முண்டாவின் பிறந்த நாளான இன்று,  மத்திய அரசு ஜன்ஜாதிய கவுரவ் தினமாகக் கொண்டாடுவதால் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.  மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடி, சொந்த கிராமத்திலேயே ரேஷன் பொருட்களை பெறும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து ஆந்திரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உண்டு, உறைவிடப் பள்ளிகளுக்கான அடிக்கல் நாட்டுகிறார். ஜன்ஜாதிய சுய உதவிக்குழுக்களால் உருவாக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சியை பார்வையிடும் பிரதமர், பழங்குடியின பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்க உள்ளார்.  இந்தப் பயணத்தின் போது, மறுசீரமைக்கப்பட்ட ராணி கமலபதி ரயில் நிலையத்தை திறந்து வைக்கும் பிரதமர், மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு ரயில்வே பணிகளையும் தொடங்கி வைப்பார்.

பொருளாதார மேம்பாடு குறித்து நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

பொருளாதார மேம்பாடு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்க உள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பது, தொழில் சூழல்களை உருவாக்குவது தொடர்பாக மாநில முதலமைச்சர்கள் மற்றும் நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொள்கிறார். இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்.  

கேரளாவில் கனமழையால் நிரம்பும் அணைகள்

கேரளாவில் கனமழை பெய்து வருவதால் அம்மாநில மக்கள் கவனமுடன் இருக்கும்படி காங்கிரஸ்  முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். கேரளாவில் நேற்று முன் தினம் முதல் கனமழை பெய்து வருவதால், அணைகள் நிரம்பி திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. தொடரும் மழையால் இடுக்கி, திரிச்சூர் மற்றும் எர்ணாக்குளம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள சகோதர, சகோதரிகள் கவனமுடன் இருக்கும்படி ராகுல்காந்தி டிவிட்டரில் கேட்டுக் கொண்டார். அனைத்து பாதுகாப்பு வழிகளை பின்பற்றும்படி கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவுமாறும் கூறியுள்ளார். 

சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் - இன்று முதல் வழக்கமான கட்டணம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று முதல் வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் மழை வெள்ள பாதிப்பு முடியும் வரை, சென்னையில்  உள்ள 403 அம்மா உணவகங்களில் கட்டணம் இல்லாமல் உணவு விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இயல்பு நிலை திரும்பியுள்ளதால், இன்று முதல் அம்மா உணவகங்களில் வழக்கமான கட்டணம் வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறையில் உள்ள ரவிசந்திரன் - நாளை பரோலில் வருவதாகத் தகவல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள ரவிசந்திரன் இன்றைக்கு பதிலாக நாளை பரோலில் வெளிவருவார் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை மத்திய சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இன்று அவர் பரோலில் வருவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட மதுரையில் இருந்து தரை வழிப் பயணமாக முதல்வர் கன்னியாகுமாரி செல்ல உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்க இயலாத காரணத்தால் நாளை ரவிச்சந்திரன் பரோலில் விடுவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூழ்கிய குடியாத்தம் தரைப்பாலம்

கனமழை காரணமாக மோர்தானா அணை முழுக்கொள்ளளவை எட்டியதால், அணையில் இருந்து ஆயிரத்து 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் வேலூர் மாவட்டம் கவுண்டன்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், ஆற்றின் குறுக்கே உள்ள குடியாத்தம் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், கடந்த 5 நாட்களாக போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் காமராஜர் பாலத்தின் மீது திருப்பி விடப்பட்ட நிலையில், பழைய பேருந்து நிலையம் முதல் காமராஜர் பாலம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும்,காவல் துறையினர் மிகவும் சிரமத்துடன் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.

அரசியலில் களமிறங்கும் சோனுசூட் தங்கை

தனது தங்கை அரசியலில் ஈடுபட உள்ளதாக பாலிவுட் நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மோகாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது தங்கையான மால்விகா சூட் பஞ்சாப்பில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். அரசியலில் கால் பதிக்க தனது தங்கை தயாராகி விட்டதாக கூறிய சோனு சூட், எந்த கட்சி சார்பில் அவர் போட்டியிடுவார் என தெரிவிக்கவில்லை. பலருக்கு உதவுவதன் மூலம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கும் சோனு சூட், அரசியலில் ஈடுபடும் தங்கைக்கு ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளது. 

அசெரை மணந்தது தனது அதிர்ஷ்டம் - கணவர் குறித்து மலாலா புகழாரம்

சமீபமாக திருமணம் செய்து கொண்ட மலாலா தனது கணவர் அசெர் மாலிக்கை மணந்தது தனது அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார். நோபல் பரிசு பெற்ற பெண்கல்விப் போராளி மலாலாவுக்கு கடந்த 9ம் தேதி பிர்மிங்காமில் திருமணம் நடைபெற்றது. அதில் அவரது நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், தனது மதிப்புகளைப் புரிந்து கொண்ட அசெர் மாலிக்கை மணந்ததால், தான் ஒரு அதிர்ஷ்டசாலி என்று குறிப்பிட்டார்.











Next Story

மேலும் செய்திகள்