கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மற்றும் மண்சரிவு காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக கேரளாவில் வெள்ளிக்கிழமை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக முக்கிய அணைகள் திறக்கப்பட்டதால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோட்டயம் அருகே பூஞ்ச் ஆறு பகுதியிலிருந்து இராத்திரி பேட்டைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து வெள்ளத்தில் மூழ்கியது.
இதனையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள், அப்பகுதி பொதுமக்களின் உதவியோடு மீட்கப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
கோட்டயம் மாவட்டம் குட்டிக்கல் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் 13 பேர் மாயமாகினர். இதில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இடுக்கியில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்து பெண் உட்பட 2 இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே பத்தினம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை கேரள அரசு முடுக்கி விட்டுள்ளது.
Next Story