த்ரிஷ்யம் பட பாணியில் நண்பரை கொன்று புதைத்த கொடூரம்

த்ரிஷ்யம் பட பாணியில் கேரளாவில் நண்பரை கொலை செய்து கட்டுமானம் நடந்த பகுதியில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
த்ரிஷ்யம் பட பாணியில் நண்பரை கொன்று புதைத்த கொடூரம்
x
த்ரிஷ்யம் பட பாணியில் கேரளாவில் நண்பரை கொலை செய்து கட்டுமானம் நடந்த பகுதியில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? இப்போது பார்க்கலாம்...

நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் காட்சிகளை போலவே கேரளாவில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரள மாநிலம்  கண்ணூரில் உள்ள இரிக்கூர் அருகே பெருவளத்பரம்பு பகுதியில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தவர் ஆஷிகுல் இஸ்லாம். மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்த இவர், தன் நண்பர்கள் பரேஷ்நாத் மண்டல் மற்றும் கணேஷ் ஆகியோருடன் அறை எடுத்து தங்கி வசித்து வந்தார். 

இதனிடையே கடந்த ஜூன் 28ஆம் தேதி திடீரென மாயமானார் ஆஷிகுல் இஸ்லாம். அதேநேரம் அவருடன் இருந்த மற்ற 2 பேரும் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. இதனிடையே இஸ்லாமை காணாததால் அவரின் சகோதரர் மோமின், இரிக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையடுத்து போலீசார் மாயமான 3 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் பரேஷ்நாத் மும்பைக்கு அருகே இருப்பது தெரியவந்தது. அப்போது அங்கு விரைந்த தனிப்படை போலீசார், மும்பையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த பரேஷ்நாத்தை கைது செய்தனர். கட்டுமான பணியில் இருந்த போது அவரை கைது செய்த போலீசார் கேரளாவிற்கு அழைத்து வந்தனர். 

அப்போது அவரிடம் விசாரணை நடத்திய போது தான் இஸ்லாம் கொல்லப்பட்டது தெரியவந்தது. அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக ஆஷிகுல் இஸ்லாமை கொன்ற அவர்கள், தாங்கள் வேலை பார்த்த கட்டடடத்தின் கழிவறையின் மூலையில் புதைத்துள்ளனர். சுமார் ஒடி அடி ஆழத்திற்கு குழி தோண்டி உடலை புதைத்து விட்டு கான்கிரீட் கலவையை வைத்து பூசியதாகவும் வாக்குமூலம் அளித்தார். 

அவர் கொடுத்த தகவலின் பேரில் இஸ்லாமின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனை பணிகளும் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பரேஷ்நாத்தை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மற்றொரு குற்றவாளியை தேடும் பணி நடந்து வருகிறது. 

சினிமா காட்சிகளை போலவே நிஜத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.... 



Next Story

மேலும் செய்திகள்