ஏ.டி.எம் இயந்திரத்தில் நூதன மோசடி - அரியானாவில் முக்கிய குற்றவாளி கைது

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். நூதன திருட்டு வழக்கில், ஆன்லைன் மோசடிகளுக்கு பெயர் போன அரியானா மாநிலம் மேவாத் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியை சென்னை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
x
சென்னையில் கடந்த 17 முதல் 19 ஆம் தேதி வரை  பல்வேறு இடங்களில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். இயந்திரத்தை குறி வைத்து நூதன முறையில் 20 இடங்களில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வமாக 21 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன இந்த புகார்களின் அடிப்படையில் சுமார் 60 லட்சம் ரூபாய் வரை பணம் திருடு போயிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. 
பல ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி 500-க்கும் மேற்பட்ட முறை இயந்திரத்தில் ஸ்வைப் செய்து பணம் திருடப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக பெரியமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட எஸ்.பி.ஐ. வங்கி கிளையில் 190 முறை ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி,  சுமார் 18 லட்சம் ரூபாய் வரை மர்ம நபர்கள் திருடி உள்ளனர். இந்த நூதன திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க,  தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையிலான 2  தனிப்படை அமைக்கப்பட்டது. நூதன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அரியானா மாநிலம் மேவாத்  மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதனை அடுத்து  ஆன்லைன் மோசடிக்கு பெயர் போன மேவாத்தில் தனிப்படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர். சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் முக்கிய குற்றவாளி என கருதப்படும் நபரை தனிப்படையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அவரிடம் இருந்து  ஆன்லைன் டேட்டா , அதிநவீன தொழில் நுட்ப கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரியானா போலீஸ் உதவி இல்லாமல், ஆன்லைன் மோசடி கும்பலை அவர்களது தலைமையகத்திலேயே  கைது செய்து தமிழக காவல் துறை சாதனை படைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்