கொரோனா 2 வது அலை எதிரொலி - வங்கதேசத்தில் 8 நாட்கள் முழு ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, வங்கதேசத்தில் நாளை முதல் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை 6 லட்சத்து 84 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 ஆயிரத்து 739 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், நோய் தொற்றை கட்டுப்படுத்த நாளை முதல் 8 நாட்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று வங்கதேச அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ரயில் மற்றும் பேருந்து சேவைகள் உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், மூடப்பட உள்ளன. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருந்துகள் விற்பனை மட்டும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்படும் என்றும், ஆனால் தொழிலாளர்களுக்கான போக்குவரத்து வசதிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே செய்துகொள்ள வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story