ரபேல் ஒப்பந்தத்துக்கு ரூ. 9 கோடி லஞ்சம்? - மீண்டும் வெடித்த சர்ச்சை

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே மீண்டும் வெடித்துள்ள மோதலுக்கு காரணம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
ரபேல் ஒப்பந்தத்துக்கு ரூ. 9 கோடி லஞ்சம்? - மீண்டும் வெடித்த சர்ச்சை
x
59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு பிரான்சுடன் ஒப்பந்தம் செய்தது.இந்த ஒப்பந்தப்படி பிரான்சின் டசால்ட் நிறுவனம் 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து விமானங்களையும் இந்தியாவுக்கு வழங்க வேண்டும். அந்தவகையில் இதுவரையில் 14 விமானங்கள் இந்தியா வந்துள்ளன. இந்திய பாதுகாப்பு துறையில் சமீபத்திய மிகப்பெரிய ஒப்பந்தமாக பார்க்கப்படும் இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.ஏற்கனவே தங்கள் ஆட்சியில் நிர்ணயம் செய்யப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு வாங்கப்படுகிறது என்றும் விமானங்கள் தயாரிப்பில் பங்குதாரராக அனில் அம்பானியின் நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இவ்விவகாரம் தொடர்பான வழக்கில் எந்தவித முறைகேடுகளும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததும் சர்ச்சைகள் ஓய்ந்தன. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மீடியாபார்ட் (Mediapart ) செய்தி நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்துக்காக இடைத்தரகர் ஒருவருக்கு கமிஷன் வழங்கப்பட்டுள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது.டசால்ட் நிறுவனம் இடைத்தரகருக்கு 1.1 மில்லியன் யூரோ, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாயை கமிஷனாக வழங்கியுள்ளது என்றும்பிரெஞ்சு ஊழல் தடுப்பு நிறுவனம் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெப்சிஸ் சொல்யூசன்ஸ் என்ற இந்திய நிறுவனத்துக்கு கமிஷன் கைமாறப்பட்டு இருப்பதாகவும் இந்த தொகையை வாடிக்கையாளருக்கு பரிசுகள் என டசால்ட் நிறுவனம் செலவாக காட்டியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. டெப்சிஸ் நிறுவனம், அகஸ்டா வெஸ்லேண்ட் ஹெலிகாப்டர்  முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட சுஷேன் மோகன் குப்தாவின் நிறுவனமாகும்.இந்த தகவல் மீண்டும் இந்தியாவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, அப்படி கமிஷன் கொடுக்கப்பட்டு இருந்தால், இந்திய அரசில் யாருக்கு கொடுக்கப்பட்டது? என்பதை கண்டறிய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நாட்டுக்கு பதில் கூறுவாரா? என்றும் கேள்வியை எழுப்பியிருந்தார்.இதற்கிடையே குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என பா.ஜனதா மறுத்துள்ளது.பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், முறைகேடு என வெளியாகியிருக்கும் தகவல், அங்குள்ள கார்பரேட் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியால் வெளியாகி இருக்கலாம் என்று கூறியுள்ளார்.இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பாஜக இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் விவகாரத்தில் கர்மவினையில் இருந்து யாரும் தப்ப முடியாது என மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்