முதியோர் காப்பகத்தில் மலர்ந்த காதல் - கைகோர்த்த 58 வயது ஆண் : 65 வயது பெண்

காதலர் தினத்தன்று, கேரளாவில் உள்ள காப்பகம் ஒன்றில், முதியோர் இருவர் திருமணம் செய்துள்ளனர். அதைப் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு....
முதியோர் காப்பகத்தில் மலர்ந்த காதல் - கைகோர்த்த 58 வயது ஆண் : 65 வயது பெண்
x
கணக்கற்ற தடைகளை தகர்த்தெறிந்துவிட்டு மலர்வதுதான் காதல்.... அத்தகைய சிறப்புமிக்க காதலுக்கு வயது மட்டும் தடையாகிவிடுமா என்ன?... கேரளாவில் உள்ள முதியோர் காப்பகத்தில் காதலர் தினத்தன்று, அரங்கேறி உள்ள ருசிகர சம்பவம், காதலுக்கு மொழி, இனம், வயது என எதுவும் தடையாகிவிடாது என்பதை எடுத்துக்காட்டி உள்ளது.... திருச்சியை சேர்ந்த 58 வயதான ராஜன் என்பவர், சபரிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில், சமையல் வேலை செய்து வந்துள்ளார். 

திருமணம் ஆகாத இவர், தனது வருவாயை, சொந்த ஊரில் உள்ள சகோதரிகளுக்கு வழங்கி, வாழ்ந்து வந்த நிலையில், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து, அடூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார். இவரைப்போல், மண்ணடி பகுதியை சேர்ந்த, வாய் பேச இயலாத, 65 வயதான சரஸ்வதி என்பவரும், திருமணம் ஆகாமல், அரவணைப்பின்றி தவித்த நிலையில், அதே காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார்.  காப்பகத்தில் ராஜனும் சரஸ்வதியும், அறிமுகமாகி நண்பர்களாக பழக ஆரம்பித்துள்ளனர். நாளடைவில் அவர்களின் நட்பு, காதலாக கனிந்து உள்ளது.... 
  
காப்பகத்தில்,  பரஸ்பரம் புரிந்துகொண்ட இருவரும், வயது என்பதை வெறும் எண்ணாக கருதி, காதலில் திளைத்து வந்துள்ளனர்.... இவர்களின் காதலை அறிந்த காப்பக நிர்வாகிகள், காதலர் தினத்தன்றே, ராஜனுக்கும் சரஸ்வதிக்கும் திருமணம் நடத்தி, கரம் சேர வைத்துள்ளனர்.  காப்பகத்தில் எளிய முறையில் நடந்த திருமண விழாவில், இருவரும் கைகோர்த்து, காதலின் முதிர்ச்சியையும், புரிதலையும் உலகுக்கு வெளிக் கொணர்ந்து உள்ளனர்...

தந்தி டிவி செய்திகளுக்காக நாகர்கோவில் செய்தியாளர் பிரசாத்.

Next Story

மேலும் செய்திகள்