ஆகஸ்ட் 15ல் கொரோனாவிடம் இருந்து விடுதலையா?

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பாரத் பயோ டெக் நிறுவனம் கோவாக்சின் என்ற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து இருக்கிறது.
ஆகஸ்ட் 15ல் கொரோனாவிடம் இருந்து விடுதலையா?
x
கொரோனாவுக்கு தடுப்பூசி என இந்தியாவில் அறிமுகமாகி உள்ள கோவாக்சின் மருந்து வரும் ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்படும்  நிலையில் இந்த மருந்தை உருவாக்கிய பாரத் பயோ டெக் நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு தமிழர் என்ற தகவல் பெருமிதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.... 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பாரத் பயோ டெக் நிறுவனம் கோவாக்சின் என்ற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து இருக்கிறது. உலகளவில் 148 கொரோனா தடுப்பூசிகள்  சோதனை நடந்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கென உருவாக்கப்பட்ட முதல் தடுப்பூசி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த கோவாக்சின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த இந்த மருந்து விலங்குகளுக்கு கொடுத்து சோதனை செய்யப்பட்டது. பாதுகாப்பானதாகவும் நோய் எதிர்ப்பு எதிர்வினையைத் தூண்டுவதாகவும் இந்த கோவாக்சின் மருந்து உள்ளதாக தெரிவித்துள்ள பயோ டெக் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் இதனை மனிதர்களுக்கு செலுத்தி சோதனையை மேற்கொள்ள ஐசிஎம்ஆர் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வரும் 7 ஆம் தேதி முதல் இந்த மருந்து மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது. அதன்படி சென்னை, விசாகப்பட்டினம், டெல்லி, பாட்னா, பெல்காம், நாக்பூர், கோரக்பூர், ஹைதராபாத், கான்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட  இடங்களில் கோவாக்சின் மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்வதற்காக மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன... மத்திய அரசு மேற்பார்வையில் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்புடன் இந்த கோவாக்சின் மருந்து சோதனை நடத்தப்பட உள்ளது என்பதால் இதற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

கொரோனாவை ஒழிப்பதே இப்போது முதன்மையான பணியாக இருக்கும் நிலையில் தடுப்பூசி சோதனையை விரைந்து மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோவாக்சின் மருந்தை கண்டுபிடித்த பாரத் பயோ டெக் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எல்லா தமிழகத்தை சேர்ந்தவர் என்பது கூடுதல் சிறப்பு... 

ஏற்கனவே இந்த நிறுவனம், ஜிகா வைரஸ், எபோலா வைரஸ் உள்ளிட்டவற்றிற்கு தடுப்பு மருந்துகள் தயாரித்த அனுபவம் பெற்றது என்பதால் இப்போது கோவாக்சின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதேபோல் குஜராத்தை சேர்ந்த இன்னொரு இந்திய நிறுவனமான ஸைடஸ் காடிலா என்ற நிறுவனமும் கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இதையும் மனிதர்கள் மீதான பரிசோதனைக்கு அனுமதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

மனிதர்கள் மீதான சோதனைக்கு முன் வருவோர் யார்? இந்த மருந்துகள் எந்த அளவிற்கு பயனுள்ளது? விலை எவ்வளவு? யாருக்கெல்லாம் செலுத்தலாம்? என அடுக்கடுக்கான கேள்விகள் முளைத்து நிற்கிறது. மருந்து சோதனையை மேற்கொள்ள தன்னார்வலர்கள் முன்வரும் நிலையில் அவர்களுக்கு சோதனை நடத்தி இந்த மருந்தை ஆகஸ்ட் மாதத்தில் நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

ஆகஸ்ட் மாதத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து இயல்பு நிலை திரும்புமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது... 

Next Story

மேலும் செய்திகள்