சிறையில் இருந்தபடியே வெடிகுண்டு மிரட்டல் : 8 பேர் மீது வழக்குப் பதிவு
புதுச்சேரியில் சிறையில் இருந்தபடியே ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கைதியை மற்ற கைதிகள் தாக்கி உள்ளனர்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகை, ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, சிறையில் உள்ள விசாரணை கைதி நித்திஷ் சர்மா மீது பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம், சிறையில் இருந்து காவல் கட்டுபாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்ததால், கைதிகள் செல்போன் பயன்படுத்துவது அம்பலமானது. இதனால் ஆத்திரமடைந்த மற்ற கைதிகளான கனகராஜ், சுந்தர், பாம்-ரவி உள்ளிட்ட எட்டு பேர் நித்திஷ் சர்மாவை சரமாரியாக தாக்கினர். சிறைக்குள் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, சிறைத்துறை ஐ.ஜி பங்கஜ்குமார் ஜா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் ஆல்வால் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினர். அப்போது புதுச்சேரி காலாப்பட்டு சிறைக்குள் செல்போன் நடமாட்டத்தை ஒடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
Next Story