ககன்யான் திட்டத்தை செயல்படுத்த விஞ்ஞானிகள் தீவிரம் - விண்வெளிக்குச் செல்லும் இந்திய வீரர்களுக்கு உணவு
ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும், உணவும் தயாராகி உள்ளது.
உலக நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில், விண்வெளித் துறையில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2021-ஆம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவியோடு, இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேரோடு செல்லும் ககன்யான் விண்கலம், விண்வெளியில், ஐந்து முதல், ஏழு நாட்கள் தங்கியிருந்து, ஆய்வு நடத்த உள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இந்த விண்கலமானது, ஜி. எஸ். எல். வி மார்க் III மூலம்விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்நிலையில், இந்த விண்கலத்துக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ-வுக்கும், இஸ்ரோ-வுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்தாகின.
இதன்படி, விண்வெளி வீரர்களுக்கான உணவு, மற்றும் அவசரகால உயிர்காக்கும் கருவிகள், கதிர்வீச்சு கணக்கிடுதல், விண்கலத்தை பாதுகாப்பாக மீட்பதற்கான பாராசூட்கள் உள்ளிட்டவற்றை டிஆர்டிஓ வழங்க உள்ளது. விண்கலத்தில் மனிதர்கள் செல்வதால் அவர்கள் எடுத்துச்செல்ல பாதுகாப்பான உணவும் தயாரிக்கப்பட்டுள்ளது. மைசூரில் உள்ள பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகத்தால், முட்டை ரோல், வெஜ் ரோல், இட்லி மற்றும் வெஜ் புலாவ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. விண்வெளியில் இருக்கும் வீரர்கள் இதை சூடுபடுத்தி உண்ண, உணவு ஹீட்டர்களும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ, விண்வெளித் துறையில் பல புதிய சாதனைகளை படைத்து வரும் நிலையில், ககன்யான் பயணம் வெற்றி விஞ்ஞானிகளும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தினரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
Next Story