தமிழகத்திற்கு ரூ. 22,762 கோடி ஒதுக்கீடு...மத்திய அரசு தகவல்....

அம்ருத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு சுமார் 22 ஆயிரத்து 762 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்திற்கு ரூ. 22,762 கோடி ஒதுக்கீடு...மத்திய அரசு தகவல்....
x
பிரதமரின் வீட்டுவசதி திட்டம், அம்ருத் மற்றும் பொலிவுறு நகரம் திட்டங்கள், தமிழ்நாட்டில் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது குறித்து மத்திய அரசு செய்தி தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்ருத் திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு அதிகபட்சமாக 11 ஆயிரத்து 441 கோடியே, 34 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தொகை மூலம் தமிழகத்தில் 445 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஈரோடு, திருப்பூர், ஓசூர், வேலூர், ஆம்பூர், கோவை, மதுரை, ராஜபாளையம், நாகர்கோவில் மற்றும் கும்பகோணம் ஆகிய நகரங்களில் 18 பெரிய குடிநீர் விநியோகத் திட்டங்கள் 6 ஆயிரத்து 495 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில், மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை, கோவை உட்பட 11 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை தியாகராயநகரில் நடைபாதை வளாகங்கள் அமைக்கும் பணியும், கோவையில் 8 நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகளும், மதுரையில் சுற்றுலா சார்ந்த கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களும், திருச்சியில் மலைக்கோட்டை சுற்று வட்டார மேம்பாட்டுத் திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில், தமிழ்நாட்டில் 27 ஆயிரத்து 557 கோடி ரூபாய் செலவில் 5 லட்சத்து, 97 ஆயிரத்து 25 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இதில் 22 ஆயிரத்து 115 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 46 ஆயிரத்து 435 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாக, மத்திய அரசு செய்தி தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்