அரசியல் சூழல் களைகட்டியுள்ள நிலையில் கேரளா யாருக்கு சாதகம்...?

அரசியல் சூழல் களைகட்டியுள்ள நிலையில் கேரளாவில் யாருக்கு சாதகமான சூழல் நிலவி வருகிறது.
அரசியல் சூழல் களைகட்டியுள்ள நிலையில் கேரளா யாருக்கு சாதகம்...?
x
* கேரள மாநிலத்தை பொறுத்தவரை  தேசிய கட்சிகளுக்கு தான் செல்வாக்கு அதிகம். பெரும்பாலான தேர்தல்களில் தேசிய கட்சிகளே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மாநில கட்சிகளுக்கு கேரளாவில் அதிக பலம் இல்லை. காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்களே கேரள மாநிலத்தின் முதல்வர்களாக இதுவரை மாறி மாறி இருந்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் மொத்தம் 20 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. கேரளாவில் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில், 74.04 சதவீத வாக்குகள் பதிவாகின. 

* காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில், முஸ்லீம் லீக் கட்சி, கேரளா காங்கிரஸ், சோசியலிச ஜனதா கட்சி, புரட்சிகர சோசியலிச கட்சி ஆகியவை இடம் பெற்றன. சி.பி.எம் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியில் சி.பி,ஐ, மதசார்பற்ற ஜனதா தளம், புரட்சிகர சோசியலிச போல்ஷ்விக் கட்சி ஆகியவை இடம் பெற்றன. கேரளாவில் 2014 நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி, 31.10 சதவீத வாக்குகளை பெற்று 8 இடங்களில் வெற்றி பெற்றது.

* அதன் தோழமை கட்சிகள் 4 இடங்களில் வென்றன. மொத்தம் 12 இடங்கள் இந்த அணிக்கு கிடைத்தது. அன்றைய கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் காங்கிரஸ் அணி பெரும் வெற்றி பெற்றது. சி.பி.எம் கட்சி 21.59 சதவீத வாக்குகள் பெற்று, 5 இடங்களில் வெற்றி பெற்றது. சி.பி.எம் ஆதரவு பெற்ற சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். சி.பி.ஐ ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. மொத்தம் 8 இடங்கள் இந்த அணிக்கு கிடைத்தது. 

* பாரதிய ஜனதா கட்சி 18 இடங்களில் போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. 2016 கேரள சட்டமன்ற தேர்தலில், 43.48 சதவீத வாக்குகள் பெற்று, 91 இடங்களில் வென்று, இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியை பிடித்தது. பினராயி விஜயன் முதல்வராக பதவி ஏற்றார். 

* ஐக்கிய ஜனநாயக முன்னணி 38.81 சதவீத வாக்குகள் பெற்று, 47 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. பா.ஜ.க ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களம் இறங்கும் சசி தரூர், சென்ற முறையும் இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர். ஐ.நா சபையின் துணை பொதுச் செயலாளராக பணியாற்றியவர். மன்மோகன் சிங் காலகட்டத்தில் மத்திய அமைச்சராக பணியாற்றியவர்.  

* சாலக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இடதுசாரி முன்னணியின் ஆதரவோடு 2014இல் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளரான பழம் பெரும் நகைச்சுவை நடிகர் இன்னசென்ட், இந்த முறையும்
அதே தொகுதியில் போட்டியிடுகிறார். 

* 2014இல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான சாக்கோவை தோற்கடித்தவர் நடிகர் இன்னசென்ட். எர்ணாகுளம் நாடாளுமன்ற உறுப்பினரரான கே.வி.தாமஸ், மன்மோகன் சிங் அமைச்சரவையில் உணவு அமைச்சராக பணியாற்றிய பழம்பெரும் காங்கிரஸ் தலைவர். இந்த முறை அவருக்கு சீட் கொடுக்கப்படாததால்
அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. சென்ற மாதம் நடைபெற்ற 30 உள்ளாட்சி மன்றங்களுக்கான இடைத்தேர்தல்களில், 16 இடங்களில் இடதுசாரி முன்னணி வெற்றி பெற்றது. 

* 12 இடங்களில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை கோயில் விவகாரத்தை தேர்தல் சூழலுக்கு பயன்படுத்திக் கொள்ள சில அரசியல் கட்சிகள் காத்திருந்தன. 

* ஆனால் இந்த விவகாரத்தை தேர்தலுக்காக கையில் எடுக்க கூடாது என மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சபரிமலை விவகாரம் தேர்தலில் அந்த மாநில மக்கள் எடுக்கப் போகும் முடிவில் தாக்கதத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றன பாஜகவும் காங்கிரஸூம். ஏப்ரல் 23 ஆம் தேதி கேரள மாநிலத்தில் தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெறப் போவது யார் என்பதை மக்கள் முடிவு செய்யும் நாளாகவே இருக்கும். 


Next Story

மேலும் செய்திகள்