கோலாகலமாக நடந்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்
நேற்று நடைபெற்ற முகேஷ் அம்பானியின் மகள் திருமணத்திற்கு சுமார் 700 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷாவிற்கும், ரியல் எஸ்டேட் அதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் நேற்று மும்பையில் ஆடம்பரமாக திருமணம் நடந்தது. இதற்காக, முகேஷ் அம்பானிக்கு சொந்தமான 27 அடுக்கு மாடிகளை கொண்ட பிரம்மாண்ட வீடு முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. கண்கவர் மலர் அலங்காரத்தால், அந்தப் பகுதியே நந்தவனம் போல காட்சி அளித்தது. வீடு அமைந்துள்ள வீதி முழுவதும் தோரணங்களால் ஜோடிக்கப்பட்டிருந்தன. அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவி ஹிலாரி கிளிண்டன், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மராட்டிய முதலமைச்சர் ஃபட்னாவிஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா, நடிகர் ரஜினிகாந்த், டாடா குழும தலைவர் ரத்தன் டாட்டா, பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், சயிப் அலிகான், ஐஸ்வர்யா ராய், கரினா கபூர், ஆலியா பட், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்,என நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் இந்த திருமணத்தில் பங்கேற்றனர். திருமணத்திற்காக சுமார் 700 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆசியாவிலேயே மிக அதிக செலவில் நடைபெற்ற திருமணம் என்ற பெருமையை இஷா அம்பானி திருமணம் பெற்றுள்ளது.
Next Story