வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்க கோரிய வழக்கு
வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் அட்டையுடன் இணைக்க கோரிய மனு குறித்து 3 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசு மற்றும் ஆதார் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலி வாக்காளர்கள் தேர்தல் முறைகேடுகள் உள்ளிட்டவற்றை தடுக்க, வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்தார். மணிக்குமார் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததாகவும் சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அந்த நடவடிக்கைகளை நிறுத்தி விட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க ஆதரவு தெரிவிப்பதாகவும் இது தொடர்பாக மத்திய அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அவர் வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மத்திய சட்டத்துறை ஆதார் ஆணையம் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்த்து, 3 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
Next Story