பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் மறைவு- உடல் உறுப்புகளை தானமாக தந்த குடும்பத்தினர்

சாலை விபத்தில் சிக்கிய பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார்.
பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் மறைவு- உடல் உறுப்புகளை தானமாக தந்த குடும்பத்தினர்
x
 அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானமாக வழங்கி உள்ளனர். தேசிய விருது வென்ற நடிகர் சஞ்சாரி விஜயின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  கன்னட திரை உலகிற்கு அத்திபூத்தாற்போல் கிடைத்த அபூர்வ துணை நடிகர்... தான் ஏற்கும் கதாபாத்திரங்களை அச்சுப் பிசகாமல் நடிப்பதில் வல்லவரான சஞ்சாரி விஜய், கன்னட திரை உலகின் முன்னணி துணை நடிகராக வலம் வந்தவர். ஆரம்பத்தில் சஞ்சாரி என்ற நாடகக் குழுவில் நடித்து வந்த இவரின் இயற்பெயர் விஜய் குமார் பசவராஜய்யா...தனது தொடர் முயற்சிகளால் கடந்த 2011-ஆம் ஆண்டு 'ரங்கப்பா ஹோக்பிட்னா' என்ற கன்னட படத்தின் வாயிலாக திரைத்துறையிலும் அடியெடுத்து வைத்தார் விஜய். திரைத்துறையில் அடியெடுத்து வைத்த பின்னர், தனது முன்னேற்றத்துக்கு துணை நின்ற சஞ்சாரி நாடகக் குழுவின் பெயரை, நன்றி மறவாமல் தனது பெயருக்கு முன்பாக இணைத்துக் கொண்டார். தசவாலா, கில்லிங் வீரப்பா, வர்த்தமானா மற்றும் சிப்பாயி என சுமார் 25 படங்களில் நடித்திருக்கும் சஞ்சாரி விஜய் 2014-ஆம் ஆண்டில் 'ஹரிவு' என்ற படம் மூலம் கதாநாயகன் அந்தஸ்தையும் பெற்றார். ஆனால், அவர் மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சிய படம், நானு அவனல்ல அவளு...கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், திருநங்கை கதாபாத்திரத்தில் ரத்தமும் சதையுமாக நடித்து ஒரு திருநங்கையாகவே திரையில் வாழ்ந்திருப்பார் சஞ்சாரி விஜய்...சமூக ஆர்வலரும், திருநங்கையுமான லிவ்விங் ஸ்மைல் வித்யாவின் சுயசரிதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம், சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் அவருக்கு பெற்றுத் தந்தது. தேசிய விருது பெற்ற பின்னர், கன்னட திரை உலகின் முன்னணி நடிகராக மாறிய சஞ்சாரி விஜய், கொரோனா காலத்தில் தன்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வந்தார். இந்நிலையில், வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்க தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கினார். ஹெல்மெட் அணியாததால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தார்.பிழைக்க வைக்க முடியாது என்று மருத்துவர்கள் கைவரித்த நிலையில், சஞ்சாரி விஜயின் உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானமாக வழங்கி உள்ளனர். வெறும் 38 வயதில் உலகை விட்டுச் சென்று இருக்கிறார் சஞ்சாரி விஜய்.... கன்னட திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வரும் சூழலில், சஞ்சாரி விஜயின் இறுதிச்சடங்கை முழு அரசு மரியாதையுடன் செய்து கர்நாடக அரசு கவுரவித்து உள்ளது. 




Next Story

மேலும் செய்திகள்